
சென்னை: உயர்கல்வி துறை சார்பில் கே.வி.குப்பம், துறையூர், உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய 4 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இக்கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டு முதலே செயல்படும்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான உயர்கல்வி துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாவட்டம் ஆலந்தூர், செங்கல்பட்டு – செய்யூர், விழுப்புரம் – விக்கிரவாண்டி, கடலூர் – பண்ருட்டி, பெரம்பலூர் – கொளக்காநத்தம், தஞ்சாவூர் – திருவிடைமருதூர், திருவாரூர் – முத்துப்பேட்டை, நீலகிரி – குன்னூர், திண்டுக்கல் – நத்தம், சிவகங்கை – மானாமதுரை, தூத்துக்குடி – ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 26-ம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டு முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.