
சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஊட்டி ரயில் நிலையம் ஒன்றாகும்.
பாரதியாரின் பாடல் வரிகளை இந்து மகாசபையை உருவாக்கியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா எழுதியதாகத் தவறான பதாகை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து ரயில் ஊட்டி நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டோம்.
தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொன்மொழிகள் அடங்கிய பதாகைகளை அமைத்திருந்தனர்.
அதில் பாரதியார் எழுதிய பிரபல பாடல் வரிகளில் ஒன்றான, “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்கிற பாடல் வரிகளை மதன் மோகன் மாளவியா எழுதியதாகப் பெயர் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், ‘இந்தியைப் பற்றிச் சிறு பேச்சு அறிவு மூலமாக இந்தி பேசத் தெரியாத மக்கள் நிறையக் காரியங்களைச் சாதிக்கின்றனர்’ போன்ற வாசகங்களையும் அமைத்திருந்தனர்.
இந்தச் சர்ச்சை பதாகைகள் குறித்து விகடன் இணையப் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதாகைகளை ரயில்வே நிர்வாகத்தினர் கிழித்தெறிந்துள்ளனர்.

இது குறித்துத் தெரிவித்த ரயில் நிலைய அதிகாரிகள், “ரயில் நிலைய சுவர்களில் இருக்கும் குறிப்பிட்ட சில பதாகைகளை அகற்ற வேண்டும் எனச் சேலம் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது. அதனைத் தொடர்ந்து அகற்றினோம்” என்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற ரயில் நிலையங்களில் இது போன்ற சர்ச்சைக்குரிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்ப் பற்றாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.