
“நான் உயிரோடு இருக்கும் வரை பாமக-வுக்கு தலைவர் நான் தான்” என்று திடமாகச் சொல்கிறார் மருத்துவர் ராமதாஸ். பதிலுக்கு, “பத்து ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அய்யா அவர்களுக்கு சுகர், பிபீ எல்லாம் இருக்கிறது. அவர் நீண்ட ஆயுளோடும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும். என் மீது ஏதாவது தவறு இருந்தால் அய்யா அவர்களே… என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று டச்சிங்காக பேசி, ராமதாஸ் நிழலில் தேங்கி நிற்கும் சொச்ச நிர்வாகிகளையும் சொல்லாமல் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
இவர்களுக்கு மத்தியில் ஜி.கே.மணி போன்றவர்கள், “பாமக-வுக்குள் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சீக்கிரமே முடிவுக்கு வரும்” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவில், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் உக்ரமாகிக் கொண்டே வருவதால் கீழ்மட்ட நிர்வாகிகள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். ஏதாவது ஒரு பக்கம் சாய்பவர்களை அப்பாவும் மகனும் மாறி மாறி பொறுப்புகளை விட்டு நீக்குவதும் சேர்ப்பதுமாக பரமபதம் ஆடிக் கொண்டிருப்பதே இவர்களின் குழப்பத்துக்குக் காரணம்.