
விசாகப்பட்டினம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாபெரும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் மற்றும் சினிமா, வர்த்தக பிரமுகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று யோகாசனங்கள் செய்தனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும் நாளாக சர்வதேச யோகா தினம் இருக்கட்டும். யோகா என்பது வெறும் தனிப்பட்ட பயிற்சியாக மட்டுமல்லாமல், உலகளாவிய கூட்டாண்மை மற்றும் ஒற்றுமைக்கான சக்திவாய்ந்த கருவியாகவும் ஏற்கப்பட வேண்டும். யோகாவை கூட்டு நல்வாழ்வுக்கான பங்களிப்பாக ஒவ்வொரு தேசமும் ஏற்க வேண்டும்.