
இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் ரூ. 1 லட்சத்துக்கு ஸ்கூட்டி வாங்கி, அதற்கு போக்குவரத்துத் துறையில் ரூ. 14 லட்சத்துக்கு விஐபி நம்பர் வாங்கியது பேசுபொருளாகியிருக்கிறது.
இதில், சோலன் மாவட்டதிலுள்ள பட்டியைச் சேர்ந்த ஒருவரும், சஞ்சீவ் குமார் என்பவரும் தங்களின் இரு சக்கர வாகனத்துக்கு HP21C-0001 ஒரே எண் வேண்டுமென்று போக்குவரத்துத் துறையில் கேட்டிருக்கின்றனர்.
இதனால், போக்குவரத்துத் துறை இவ்விருவருக்கும் ஆன்லைனில் ஏலம் நடத்தியது.
ஏலத்தில் சோலன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரூ. 13.5 லட்சம் வரை செல்ல, சஞ்சீவ் குமார் அதைவிட அதிகமாக குமார் ரூ. 14 லட்சத்துக்கு சென்றார்.
அந்த நபர் மேற்கொண்டு ஏலம் கேட்காததால் HP21C-0001 எண் சஞ்சீவ் குமாருக்கே வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இந்த முழுத்தொகையும் மாநில அரசின் கருவூலத்தில் டெபாசிட் செய்யப்பட்டது.
மேலும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலத்தில் இரு சக்கர வாகனத்திற்கு வழங்கப்பட்ட மிக விலையுயர்ந்த பதிவு எண்ணாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பின்னர், தனித்துவமான எண்களைச் சேகரிப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்த சஞ்சீவ் குமார், “ஆர்வத்துக்கு எந்த விலையும் இல்லை. ஏதேனும் ஒன்றை நீங்கள் மிகவும் விரும்பும்போது அதன் விலையை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்” எனக் கூறினார்.
மேலும், அவரின் மகன் தினேஷ் குமார், “நாங்கள் அந்த எண்ணுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தோம். மற்றொரு நபரும் அதே நம்பரைக் கேட்டிருந்தார். இறுதியில், ஏலத்தின் மூலம் எங்களுக்கு அந்த எண் ஒதுக்கப்பட்டது” என்றார்.