• June 21, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அன்பிற்குரிய அம்மா (தமிழ்செல்வி,காரத்தொழுவு, உடுமலைப்பேட்டை),

முன்னெப்போதுமில்லாத, என்றுமே இருந்திருக்க வேண்டிய உன் மீதான அக்கறை, பாசம், அன்பு, மரியாதை யாவும் இப்போது சில நாட்களாக என்னுள்ளே துளிர்த்து என் வாழ்வினை அழகுறச் செய்கிறது.

ஆம் தெளிவாகத்தான் சொல்கிறேன், அவைகளின் துளிர்ப்பே என் மகிழ்வை கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பிக்கச் செய்கிறது.

தாயில் என்ன பாகுபாடு ? எல்லோருமே சுழிய சுயநலமுள்ளவர்கள் தாம். ஆனால் பிள்ளைகளில் வேறுபாடு உண்டல்லவா ? அதில் ஒரு வகையறா தான் நானும்.

இன்று நான் வேலை பார்க்கும் சென்னைக்கும், நம் ஊருக்கும் ( உடுமலைக்கும்) இருக்கும் 500 மைல்கள் இடைவெளி, என்னை உணர்தலிலும் அதனூடே சரி செய்து கொள்வதிலும் தான் குறையத் தொடங்கியது.

நான் இந்த கடிதத்தின் வாயிலாக உன்னிடம் கேட்க நினைப்பது ‘மன்னிப்பு’ தான். தாயிடம் தன் மகனின் மன்னிப்பு பொருளற்றது தான், ஆனால் இம்மகனின் தவிப்பு பொருள் மிகுந்தது.

பல நேரங்களில் சூழல்களில் யார் யாரையோ மதித்து, துதித்து பிழைத்தேனே தவிர உன்னை உணர்ந்து பாராட்டி வாழ்ந்ததில்லை. குறைந்தபட்சம் அவமதிக்காமல் இருந்திருக்கலாம்.

இப்போதெல்லாம் என் வாழ்வில் மெல்ல மெல்ல முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன, அவையாவும் என் உழைப்பின் ஓர் அங்கமாக இருந்தாலும் என் ஆழ்மனது சொல்வதெல்லாம் ஒன்றுதான், அது நான் உங்களை மதிக்கத் துவங்கியதிலிருந்து தான்.

ஆம் அதுதான் உண்மை.

பிள்ளைகளின் வாழ்க்கைப் பாதையில் வெற்றிப்படிக்கட்டுகள் அதிகரிப்பது அவரவர் அறம், அறிவு, முயற்சி, உழைப்பு சார்ந்தது. ஆனால் அவையனைத்திற்குமான அடித்தளமென்பது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், சமூகத்தையும், இந்த இயற்கையையும் அன்பொழுக நேசிப்பதிலும், மதிப்பதிலும் தான் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இனிவரும் நாட்களில் உன் முத்தங்களோடு இயங்கிடுவேன்,

இன்புறும் நிமிடங்களில் உன் முகத்தினையே நினைத்திடுவேன்.

வணங்கி மகிழ்கிறேன்

உன் அன்பு மகன்

திலீபன்

Letter Contest

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *