கீழடி அகழாய்வை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இத்துடன் கீழடியில் ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் மாற்றப்பட்டதையும் குறிப்பிட்டு மதுரையில் மத்திய அரசைக் கண்டித்து திமுக இளைஞரணி போராட்டம் நடத்தியது.
இன்று, அதிமுகவைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், கீழடி அகழாய்வுக்கு அதிமுகவே வித்திட்டதாகவும், தமிழகத்தில் பல்வேறு அகழாய்வுகள் அதிமுக காலத்திலேயே தொடங்கப்படதாகக் கூறியிருந்தார்.
கீழடியை மூட உத்தரவிட்ட பாஜக அரசு!
இதற்கு பதிலளித்த ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ எழிலன், “2013-14ல் யுபிஏ அரசாங்கம் கீழடி அகழாய்வு தளமாக அறிவித்து அறிக்கையை வெளியிட்டது. 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு 3 கட்டமாக அகழாய்வுகள் நடத்தப்பட்டன.
3வது கட்டம் 2016ல் முடிவடையும்போது, இந்திய தொல்லியல்துறை அந்த ஆய்வை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியது. தனியார் நிலத்தில் ஆய்வு நடத்துவது நீதிமன்றத்தில் சிக்கல் ஏற்படுவதாகக் கூறி ஆய்வை மூட உத்தரவிட்டது. இதை நிறுத்தியதும் அமர்நாத் அசாமுக்கு மாற்றப்படுகிறார்…” என்பதைக் குறிப்பிட்டார்.
பின்னர் கீழடி நாகரிகத்துக்கும் சிந்துவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து கலைஞர் வெளியிட்ட அறிக்கை, ஆய்வை தொடர உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார் எழிலன்.
தற்போதைய திமுக அரசு கீழடி ஆய்வுகளை உலகுக்கு எடுத்துரைக்க எடுத்த முயற்சிகள், எந்தெந்த கல்வி நிலையங்கள், ஆய்வகங்களில் என்னென்ன மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதைப் பட்டியலிட்டார்.
தமிழர் வரலாற்றை மறைக்கப் பார்ப்பது ஏன்?
“அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை இரண்டு அகழாய்வுகளுக்குதான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டறை பெரும்புதூர் என்ற இடத்தில் 55 லட்சமும், கீழடிக்கு 55 லட்சமும் ஒதுக்கியுள்ளனர். ஆனால் 105 கோடி ஒதுக்கியதாக பொய் சொல்லியிருக்கின்றனர்.” என்றார்.

பின்னர் திமுக அரசு அகழாய்வுகளுக்காக ஒதுக்கிய நிதியை பட்டியலிட்டார். 2021 முதல் 2024 வரை தொல்லியல் துறை 30 இடங்களில் ஆய்வு செய்து 38 அகழாய்வுகள் மேற்கொண்டதாகக் கூறினார். திமுக அரசு அகழாய்வுகளுக்கு 27 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார் எழிலன்.
“2016ல் அப்போதிருந்த தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அகழாய்வு தளத்தை மூடியப்பிறகுதான் அங்கு சென்று பார்வையிட்டார். இந்திய தொல்லியல்துறை இங்கு எதுவுமில்லை எனப் பின்வாங்கும்போது, இது கீழடி நாகரீகம், பாரத நாகரீகம் என சொல்லிக்கொண்டு வந்ததுதான் மிச்சம்.
அமர்நாத் அவர்கள் மாற்றப்பட்டபோது விமானத்தில் சென்று அவருடன் உரையாடல் நடத்தியதாக மாஃபா பாண்டியராஜன் கூறினார். வரும்போது அமர்நாத் அவர்களைத் தொடர்புகொண்டேன். அப்படி எந்த உரையாடலும் நடக்கவில்லை என என்னிடம் தெரிவித்தார்.

பாஜகவும் அதிமுகவும் இணைந்து தமிழர்களின் வரலாற்றை மறைக்கப்பார்ப்பது ஏன்?
கீழடியை மூட சொன்னபோது வழக்கறிஞர் கனிமொழி என்ற தனிநபர் தொடுத்த வழக்கை ஏன் மாநில அரசு தொடுக்கவில்லை?
அந்த நேரத்தில் ஒரு போராட்டமோ, அறிக்கையோ ஏன் மத்திய அரசுக்கு ஒரு கடிதமோ எழுதியிருக்கிறார்களா என்று கேட்கிறேன்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபிறகுதான் அதிமுக அரசு விழித்துக்கொண்டு கொஞ்சமாவது நிதி ஒதுக்கியது.” என்று பேசினார்.
அடிப்படை இல்லாத ஆய்வுகளுக்கு முக்கியத்துவம்?
கீழடி ஆய்வில் வழங்கப்பட்டுள்ள அறிவியல் ஆதாரங்களை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாதது குறித்து, “சரஸ்வதி நாகரீகம் என்ற அடிப்படை ஆதாரம் இல்லாத ஆய்வுகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.
2013ம் ஆண்டு ஒரு வட இந்திய சாமியார் கனவில் ஒரு கோவில் கீழே பல்லாயிரம் டன் தங்கம் இருப்பதாக சொன்னபோது, கனவின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல்துறையைப் பார்த்துக் கேட்கிறேன், இவ்வளவு அறிவியல் உண்மைகள் சமர்பிக்கப்பட்டுள்ள பிறகு கிழடியின் தொன்மையை ஒத்துக்கொள்ள உங்களை எது தடுக்கிறது?” என்றும் கேள்விகள் எழுப்பினார்.