
தி.மு.க ஐ.டி விங் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தவறாக சித்திரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம் வெளியிட்டதாக கூறி, அதற்கு எதிராக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட தி.மு.க ஐடி விங் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க-வினர் ஆறு புகார் மனுக்களை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் வழங்கினர். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
“சாது மிரண்டால் காடு கொள்ளாது. அ.தி.மு.க-வை சீண்டி பார்க்க வேண்டாம். சீண்டி பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள். மருத்துவ பணியாளர்கள் தேர்வு ஆணை என்பது அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் வருடத்திற்கு நான்காயிரம் பணியிடங்கள் வெளிப்படுத்தன்மையோடு நிரப்பப்பட்டது. ஆனால், தி.மு.க-வின் நான்காண்டு கால ஆட்சியில் நான்காயிரம் பேர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை அமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். தமிழக சுகாதாரத்துறை தற்போது மிகப்பெரிய தள்ளாட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறது. வரும் 2026 – ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் முதலமைச்சராக தமிழகத்தை ஆளப்போகும் எடப்பாடி மீது அவதூறு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. வரும் 2026 – ம் வருடம் தேர்தல் வரும் நிலையில் இதுபோன்று எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்வது என்பது தி.மு.க-விற்கு நல்லதல்ல. மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.

சரியான பாடத்தை வரும் 2026 – ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கொடுப்பார்கள். அதனால், வரும் தேர்தலை மனதில் கொண்டாவது இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடி விவகாரத்தில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தான் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதை மடைமாற்றி கீழடி விவகாரத்தை தி.மு.க-தான் செய்தது போன்று பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்றார்.