• June 20, 2025
  • NewsEditor
  • 0

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள கோடியூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் வாரச் சந்தை, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்களுக்கு முக்கிய இடமாக உள்ளது. ஆனால், இந்தச் சந்தையின் பின்புறம் மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைக் குவியல்கள் ஆகியவை குவிந்து கிடப்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் என அனைவரும் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்கின்றனர். இதனால், சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மூக்கைப் பிடித்தபடி உணவுப் பொருள்கள் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கேட்டபோது, “நாங்கள் இங்கு குப்பைகளைக் கொட்டுவதில்லை. பிளாஸ்டிக் பொருள்களையும் பயன்படுத்துவதில்லை. சந்தைக்கு வரும் பெரும்பாலானோர் துணிப்பைகளுடன் வருகின்றனர். இங்கு இருக்கும் குப்பைகள் என்றால் வெங்காயத் தோல், காய்கறித் துண்டுகள் போன்றவை மட்டுமே. ஆனால், மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சி, மூட்டை மூட்டையாக குப்பைகள் எப்படி இங்கு வருகின்றன என்பது தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். ஒரு பக்கம் சந்தை நடக்க, மறுபக்கம் கழிவுகள் குவிந்தால், எப்படி வியாபாரம் செய்வது?

இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டால் யார் பொறுப்பு? இது எங்கள் வியாபாரத்தை முற்றிலும் பாதிக்கிறது. இந்தப் பிரச்னையைத் தடுக்க எச்சரிக்கைப் பலகைகள் வைத்தும், சிலர் பொறுப்பற்று எதையும் பொருட்படுத்தாமல் குப்பைகளைக் கொட்டுகின்றனர். ஜோலார்பேட்டை நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல். ‘இதோ, அதோ’ என்று பதிலளித்து இழுத்தடிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இந்த இடத்தை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும்” என்றனர்.

இந்த விவகாரம் குறித்து ஜோலார்பேட்டை நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, “மருத்துவக் கழிவுகள் தொடர்பாக அருகிலுள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். பொறுப்பற்று குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்போம். இந்த இடத்தை விரைவில் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறோம்” என்று கூறினார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *