
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சதயவர்த்தினி (வயது: 19). இவரும், தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது: 21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த திங்கட்கிழமை நண்பர்கள் உதவியுடன் கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணத்தை முடித்துவிட்டு இருவரும் கோவையிலேயே தங்கி உள்ளனர். அதனைத் தொடர்ந்து, நேற்று காலை பேருந்து மூலம் சொந்த ஊரான கரூருக்குத் திரும்பியுள்ளனர்.
அப்போது, பல்லடம் அருகே வந்து கொண்டிருந்தபோது, கணபதியின் உறவினர்கள் இடையில் பேருந்தை வழி மறித்து இருவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி, காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து, தான்தோன்றிமலைக்கு அழைத்து வந்து கணபதியின் உறவினர் வீட்டில் வைத்து இருவரையும் பலமாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து, பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து, ‘உனது தங்கையைக் கூட்டிச் செல். இல்லையென்றால் இருவரையும் கொன்று விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர்.
அதனையடுத்து, அங்குச் சென்று தங்கையை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் பெண் வீட்டார்.
சிகிச்சையில் இருந்த திருமணமான இளம் பெண் சதயவர்த்தினி செய்தியாளர்களைச் சந்தித்து, தனக்கு நடந்த பிரச்னை குறித்துப் பேட்டியளிக்க வெளியே வந்தபோது, “அந்த பெண் வெளியே வரக்கூடாது” என போலீஸார் தடுத்து, வலுக்கட்டாயமாக உள்ளே செல்லுமாறு கூறினர்.
அதையும் மீறி சதயவர்த்தினி நடந்த சம்பவங்கள் குறித்துப் பேட்டியளித்துவிட்டு உள்ளே சென்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் நடந்த சம்பவம் குறித்து முழுமையாக எடுத்துரைத்தார்.
மேலும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞரை மீட்டு, தனது தங்கையுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.