• June 20, 2025
  • NewsEditor
  • 0

‘ஸ்மார்ட் சிட்டி மார்கெட்!’

நெல்லையில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட ஸ்மார்ட் சிட்டி மார்கெட், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளையும் பொதுமக்களையும் இன்னலில் ஆழ்த்தியுள்ளது.

நெல்லை ஸ்மார்ட் சிட்டி மார்கெட் (திறப்பு விழாவின் போது)

’40 கோடி பட்ஜெட்!’

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மகாத்மா காந்தி மார்கெட் என்ற பெயரில் கடந்த 75 ஆண்டுகளாக ஒரு சந்தை செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் வாரச்சந்தை தொடங்கப்பட்டது, பின்னாளில் தினசரி சந்தையாக மாறியது. 500 க்கும் மேற்பட்ட கடைகளை உள்ளடக்கிய இந்த சந்தையை கடந்த 2020 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கும் முடிவுக்கு அரசு வந்தது. இதற்காக 40 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

‘ரோடு ஷோ நடத்தி திறப்பு விழா!’

பணிகள் தொடங்கப்பட்டு நான்கண்டுகளில் முழுமையாக வேலைகள் முடிந்து பயன்பாட்டுக்கு தயாரானது. இந்தப் பணிகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு அருகிலுள்ள காவலர் குடியிருப்பு மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கான நாள் குறிக்கப்பட்டது. நெல்லைக்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக வந்தபோது பிப்ரவரி 6 ஆம் தேதி ரோடு ஷோ நடத்தி புதிதாக கட்டப்பட்ட மார்கெட்டை திறந்து வைத்தார்.

800 பைக்குகள் நிறுத்தும் அளவுக்கான சுரங்கத்தள பார்க்கிங் வசதியுடன் நவீனமாக கட்டப்பட்டிருந்த இந்த மார்கெட் சீக்கிரமே பயன்பாட்டுக்கு வருமென பொதுமக்களும் வியாபாரிகளும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், திறப்பு விழா கண்டு நான்கு மாதங்களாகியும் அந்த மார்கெட் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

ஸ்மார்ட் சிட்டி மார்கெட் (திறப்பு விழாவின் போது)
ஸ்மார்ட் சிட்டி மார்கெட் (திறப்பு விழாவின் போது)

‘திறந்தவுடனே மூடுவிழா!’

திறந்த கையோடு அப்படியே மூடி வைத்திருக்கிறார்கள். மார்கெட் செயல்பாட்டுக்கு வராததால் மார்கெட்டின் சுவர்கள் முழுவதும் அரசியல் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தி வைத்திருக்கின்றனர். அதேமாதிரி, மார்கெட்டின் ஒரு முனை முழுமையாக குப்பைக் கூளமாக மாறி மாடுகள் மேய்ந்துக் கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் மக்களின் பயன்பாட்டுக்காக கோடிகளை கொட்டி கட்டப்பட்ட கட்டடம் வீணாய் பயனற்று போகும் அவலநிலையே உண்டாகும்.

‘குமுறும் வியாபாரிகள்!’

புதிதாக கட்டப்பட்ட இந்த காந்தி மார்கெட்டின் அவலநிலைக்கான காரணத்தை அறிய காந்தி மார்கெட்டின் வியாபாரிகள் சங்கப் பொருளாளர் சாலமனை தொடர்புகொண்டு பேசினோம், ‘காந்தி மார்கெட்டில் மொத்தமாக 500 க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வந்தோம். காய்கறிகள், பலசரக்கு, வீட்டு உபயோகப் பொருட்கள் என மக்கள் உள்ளே வந்தால் தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிச் செல்லும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இந்த மார்கெட் செயல்பட்டு வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு மாநகராட்சி சார்பில் இந்த மார்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப் போகிறோம் என எங்களை அழைத்துப் பேசினார்கள்.

ஸ்மார்ட் சிட்டி மார்கெட் (தற்போது)
ஸ்மார்ட் சிட்டி மார்கெட் (தற்போது)

‘பழைய வியாபாரிகளுக்கே கடைகள்!’

பல இடங்களிலும் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு எதிர்ப்பே நிலவி வருகிறது. ஆனால், நாங்கள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாங்கள் தொழில் செய்யும் இடம் மேம்பட்டால் எங்களுக்குதானே நல்லது என பெரும்பாலானோர் அந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளித்தோம். திட்டத்தின் வரைகலையையும் எங்களிடம் காட்டி எங்களின் கோரிக்கைப்படியே மார்கெட்டை கட்டித்தரவும் முன்வந்தார்கள். புதிய மார்கெட்டின் பணி முடியும் வரைக்கும் அருகிலுள்ள தற்காலிக மைதானத்தில் எங்களுக்கென இடம் ஒதுக்கினார்கள். அந்த இடத்துக்கு மொத்தமாக 11 லட்ச ரூபாயை மாத வாடகையாக கட்டி வந்தோம்.

ஓராண்டிலேயே பணிகள் முடிந்துவிடும் என்றார்கள். அவர்கள் சொன்னபடி ஓராண்டில் பணிகள் முடியவில்லை. ஆனாலும் பொறுத்துக் கொண்டோம். மார்கெட்டை கட்டி முடித்த பிறகு அங்கே கடை வைத்திருந்த பழைய வியாபாரிகளுக்கே இடம் ஒதுக்க வேண்டும் என்று மாநகராட்சியிடம் கோரினோம். அதற்கும் ஒப்புக்கொண்டார்கள்.

ஏனெனில், தமிழக அரசே இதேமாதிரியான புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு அதே பழைய வியாபாரிகளுக்கு கடைகளை ஒப்படைப்பதை குறித்த நெறிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை முன்வைத்து மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கடைகளை பழைய வியாபாரிகளுக்கே வழங்கலாம் எனும் முடிவுக்கும் வந்தனர். அதன்பொருட்டு வியாபாரிகளின் ஆவணங்களை சேகரிக்கும் பணிகளிலும் இறங்கினர். நாங்களும் மொத்தமாக 15 கோடி ரூபாயை முன்பணமாக வழங்க தயாரானோம்.

ஸ்மார்ட் சிட்டி மார்கெட் (தற்போது)
ஸ்மார்ட் சிட்டி மார்கெட் (தற்போது)

ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் குடும்பத்தின் நகைகளையும் தங்களுக்கென்று இருக்கிற சொற்ப நிலத்தையும் விற்றுதான் அந்த பணத்தை ஏற்பாடு செய்தனர். கையை மீறிய செலவுதான். ஆனாலும் தொழிலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லலாம் என்கிற எண்ணத்தில் தயாரானோம். முதல்வர் திறப்பு விழாவுக்கு வருகையில் அதற்காக பத்திரிகை அடித்து போஸ்டர் ஒட்டி எங்களின் குடும்பத்தோடு தெருவில் கூடி திருவிழா போல கொண்டாடினோம். ஆனால், திடீரென யாரோ ஒருவர் எங்கிருந்தோ வந்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்து கடைகளை பழைய வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு எதிராக தீர்ப்பைப் பெற்றுவிட்டார். இதில் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது மாநகராட்சியின் மெத்தனப் போக்குதான்.

‘வலுவாக வாதாடாத மாநகராட்சி!’

மாநகராட்சி தரப்பில் வியாபாரிகளுக்கு ஆதரவாக வலுவான வாதங்களை முன்னெடுத்தே வைக்கவில்லை. இதற்கு பின்னால் யார் இருக்கிறார், என்ன நடக்கிறதென எதுவுமே புரியவில்லை. எங்களுக்கு கடைகளை ஒதுக்க தயாராக இருந்த மாநகராட்சி அதே நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் உறுதியாக வெளிப்படுத்தாதது ஏன் என தெரியவில்லை.

ஸ்மார்ட் சிட்டி மார்கெட் (தற்போது)
ஸ்மார்ட் சிட்டி மார்கெட் (தற்போது)

காந்தி மார்கெட்தான் எங்களின் வாழ்வாதாரம். 2000 க்கும் முன்பு வரை அந்த மார்கெட்டில் தொழில் செய்ய அத்தனை இடையூறுகள் இருக்கும். குத்தகைக்காரர்கள் கடும் கிராக்கி செய்வார்கள். குத்தகைக்காரர்களுக்கு இடையேயான மோதலில் எங்களின் வியாபாரம் பாதிக்கப்படும். 90 களில் திருநெல்வேலியில் நடந்த சாதிய மோதல்களில் பெரும்பாலானவற்றின் களமாக இந்த மார்கெட் இருந்திருக்கிறது. வியாபாரிகள் இறங்கி போராடித்தான் மார்கெட்டை நேரடியாக மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வைத்தோம். பல இடையூறுகளுக்கும் பிறகும் நாங்கள் எங்கேயும் செல்லாமல் இங்கேதான் தொழில் செய்து வந்தோம். ஆனால், இப்போது எங்களுக்கென கட்டப்பட்ட மார்கெட்டில் எங்களால் குடிபோக முடியவில்லை.

மாநகராட்சியிடம் கேட்டால் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்துதான் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அதனால் அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆஜராகிதான் வாதங்களை முன்னெடுத்து வைக்க வேண்டும் என்கிறார்கள். இப்போது செய்வதறியாமல் நிற்கிறோம். வியாபாரிகள் அத்தனை பேரும் எங்களின் சூழலை எடுத்துக் கூறி முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதும் வேலையில் இறங்கியிருக்கிறோம். அரசு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து வலுவான வாதங்களை முன்னெடுத்து வைத்து கடைகளை எங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொடுக்க வேண்டும். தாமதப்படுத்தினால் அடுத்தக்கட்டமாக போராட்டத்தில் இறங்குவதை குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்.’ என்றார்

அன்றும் இன்றும்
அன்றும் இன்றும்

‘நெல்லை ஸ்மார்ட் சிட்டி அவலம்!’

பாளையங்கோட்டை காந்தி மார்கெட் மட்டுமல்ல. நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்களும் சிக்கலிலேயே இருக்கிறது. நெல்லை புதிய பேருந்து நிலையம், நெல்லை பழைய பேருந்து நிலையம், நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் என மூன்று முக்கிய பேருந்து நிலையங்களுமே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்தான் புனரமைக்கப்பட்டது. அந்தப் பேருந்து நிலையங்களிலும் கடைகளை வாடகைக்கு விடுவதில் மாநகராட்சிக்கும் வியாபாரிகளுக்கும் இடையே சுமூகமான போக்கு நிலவவே இல்லை. திறந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் நெல்லை சந்திப்புப் பேருந்து நிலையத்தில் கடைகள் எதுவுமே திறக்கப்படவில்லை.

புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் முன்பணமாக அதிக தொகையை மாநகராட்சி கேட்டதால் அங்கும் மாதக்கணக்கில் பல கடைகள் அடைத்தே கிடந்தன. இப்போதுதான் மாநகராட்சிக்கும் வியாபாரிகளுக்கும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டியிருப்பதாக சொல்கிறார்கள். பேச்சுவார்த்தையின் இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுகளை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

நெல்லையில் முதல்வர்
நெல்லையில் முதல்வர்

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் கோடிகளைக் கட்டி கட்டிடங்களை எழுப்பி படோபடமாக ரோடு ஷோவெல்லாம் செய்து திறப்பு விழா நடத்தினாலும், ஸ்மார்ட் சிட்டி என்றாலே ‘அது ஒரு ஃபெயிலியர் திட்டம்!’ என்பதுதான் வியாபாரிகள் மற்றும் மக்களின் எண்ணமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மேலும் சௌகரியங்களை கொடுக்காமல் இன்னல்களைதான் அதிகம் கொடுக்கிறது என்பதுதான் வியாபாரிகளின் மனக்குமுறல்.

‘வாய் திறக்காத கமிஷனர்!’

பாளையங்கோட்டை காந்தி மார்கெட் உட்பட நெல்லையின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களிலுள்ள சிக்கல்களை பற்றி விளக்கம் கேட்க மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா ஐ.ஏ.எஸ் யை தொடர்புகொண்டோம்.

அந்த காந்தி மார்கெட் விவகாரம் என வார்த்தையை எடுத்த உடனேயே, ‘அந்த விஷயம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நடைமுறைகளின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்!’ எனக் கட்டென கூறி தொடர்பைத் துண்டித்தார். மக்களுக்கு நன்மைபயக்கும்படி எதையாவது செய்யுங்க என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *