
மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் பகுதியில் ஆஷா பணியாளராக புஷ்பலதா என்ற பெண் பணியாற்றி வந்திருக்கிறார். தனது இரண்டு குழந்தைகளை நிர்வகித்தும் கணவரை ஆதரித்தும் வந்துள்ளார் புஷ்பலதா. சிறு சிறு வேலைகளை செய்து புஷ்பலதாவின் கணவர் குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.
இப்படி சென்ற அவர்களது குடும்ப வாழ்க்கை ஒரு தொலைபேசி அழைப்பால் முற்றிலும் சிதைந்துவிட்டது.
திடீரென்று ஒரு நாள் புஷ்பலதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் வைரங்கள், தங்கங்கள் 10 லட்சம் ரொக்கப் பரிசு லாட்டரியில் விழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புஷ்பலதா மெகா லாட்டரி வென்றதாக தொலைபேசியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை பெற வேண்டுமென்றால், கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் இந்த தொகை வேறு நபருக்கு சென்றுவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
அதையடுத்து புஷ்பலதா மொத்தம் 4 லட்சம் ரூபாய் வரை மாற்றியுள்ளார். உறவினர்களிடமிருந்து கடன் வாங்கி பணத்தை மாற்றியுள்ளார். இதுகுறித்து ரகசியமாக வைத்திருக்க வேண்டும் எனவும் இல்லை எனில் பரிசு ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று புஷ்பலதா தாய் வீட்டுக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அவர் காணாமல் போனதாக குடும்பத்தினர்கள், மே நான்காம் தேதி காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
இதற்கிடையில் புஷ்பலதா நகரம் முழுவதும் தனக்கு தெரிந்த வேலைகளை செய்து இலவச லாங்கர் உணவை சாப்பிட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் பணத்தை சேகரித்து அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் காவல் துறையினர் தலையிட்டு விசாரணை மேற்கொண்டதில், இந்த அழைப்பு தொலைபேசி எண் தெரியாத ஒரு அழைப்பு என்றும் இது மோசடி அழைப்பு என்றும் கண்டறிந்தனர்.
கடைசியில் போலீசார் புஷ்பலதாவை கண்டுபிடித்தபோது அவர் பலவீனமாக இருந்ததாகவும் இத்தனை நாட்களுக்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் நல்லவர்கள் என்றும் அவர் உறுதியாக இருப்பதாக காவல்துறையின தெரிவித்தனர்.
அவருக்கு எவ்வளவு ஆலோசனைகள் வழங்கினாலும் அவரால் எதார்த்தத்தை ஜீரணிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் கூறியிருந்தனர்.
“அவர் கிராமவாசிகளிடமும் உறவினர்களிடமும் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். ஏன் என்று நாங்கள் கேட்டபோது, அவர் ஒரு உறவினருக்கு உதவுவதாகக் கூறினார். ஒரு முறை, என் மகளின் தொலைபேசியைப் பயன்படுத்தி பணம் கூட அனுப்பினார். நாங்கள் அவளை நிறுத்தும்படி கெஞ்சினோம்” என்று புஷ்பலாதாவின் மைத்துனி NDTV-யிடம் கூறியிருக்கிறார்.
போலீசார் தற்போது சைபர் தடயங்களை கண்காணித்து வருகின்றனர், இந்த மோசடி வெளிநாட்டு ஐ பி முகவரியில் இருந்து தொடங்கியதாகவும், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.