
இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இஸ்ரேல் – ஹாமஸ் – காஸா போர் தொடங்கி இப்போது நடந்து வரும் இஸ்ரேல் – ஈரான் போர் வரை இஸ்ரேலின் பின்னணியில் அமெரிக்கா இருந்து இயக்குவதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
அமெரிக்காவின் ஒத்துழைப்பில் தான் இந்தப் போர்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஈரானுடனான மோதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இஸ்ரேல் அரசின் சிறந்த நண்பர் அதிபர் ட்ரம்பிற்கு நன்றி. எங்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், இஸ்ரேலின் வான்வெளியைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் ஆதரவிற்கும் அவருக்கு நன்றி. இஸ்ரேலிய இராணுவம் எங்கள் இலக்குகளை நோக்கி படிப்படியாக நகர்கிறது” எனக் குறிப்பிட்டார்.