• June 20, 2025
  • NewsEditor
  • 0

கர்நாடக அமைச்சர்கள் கூட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர் பரமேஸ்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பட்டீல், “கா்நாடக கிராமப்புற, நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்களில் முஸ்லிம்கள் உள்பட சிறுபான்மையினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இடஒதுக்கீடு

இந்த இட ஒதுக்கீட்டு அளவை 15 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். அந்த மக்களின் சமூக நிலையை கண்டு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம்” என்றார்.

இதற்கு பா.ஜ.க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக பா.ஜ.க மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா ஆகியோர் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்திருக்கின்றனர்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “இது அரசியலமைப்பிற்கு எதிரானது. உச்ச நீதிமன்றமும் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நிராகரித்துள்ளது. இது ஓ.பி.சி, எஸ்.டி மற்றும் பொது சாதியைச் சேர்ந்த ஏழை மக்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைக்கிறது. கர்நாடக அரசு திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்கிறது. இதைக் கண்டிக்கிறேன். இதற்கு எதிராக நீதிமன்றத்தையும் அணுகுவோம்.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *