
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அமெரிக்க செய்தியாளர்களிடம் பேசிய பில் கிளிண்டன், “நெதன்யாகு நீண்ட காலமாக ஈரானுடன் போரிட விரும்பினார். அப்போதுதான் அவரால் என்றென்றும் பதவியில் நீடிக்க முடியும். அப்படித்தான், கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். அதற்காக நாம் இந்தப் போரை விட்டுவிட முடியாது. இந்தப் போரை தணிக்க முயற்சிக்க வேண்டும். அதிபர் ட்ரம்ப் அதைச் செய்வார் என்று நம்புகிறேன்.
பாலஸ்தீனம் போரில் அமைதி பேச்சுவார்த்தை பற்றி பேசவில்லை… பிரதமர் நெதன்யாகுவின் கீழ் பாலஸ்தீனியர்களுக்கு ஒரு அரசை வழங்கும் எண்ணம், இஸ்ரேலியர்களிடமும் இல்லை. இப்போது பிளவுபட்டு ஒழுங்கமைக்க முடியாத அளவுக்கு நசுக்கப்பட்டுள்ளனர். நாட்டின் நலனுக்காக நம் கூட்டாளிகளை அரவணைப்பதில் தவறில்லை. ஆனால், அறிவிக்கப்படாத போரின் போது மக்கள் பாதிக்கப்படுபவர்கள் என்றால் அதற்கு ஆதரவளிப்பது எப்படி சரியான முடிவாக இருக்க முடியும். இது போரை நிறுத்த நல்ல தீர்வாகாது.
ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அதற்காக அப்பாவி உயிர்களை விலையாக கேட்க முடியாது. தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாத பொதுமக்களை நாம் தொடர்ந்து கொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வாழ ஒரு வாய்ப்பை விரும்புகிறார்கள்” என்றார்.