
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இதனிடையே நேற்று(ஜூன் 18) பாமக எம்எல்ஏக்கள் அருள் மற்றும் ஜி.கே மணி ஆகியோர் நெஞ்சுவலி காரணமாக அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வானகரத்தில் சிகிச்சைப் பெற்று வரும் ஜி.கே மணி மற்றும் ஓமந்தூராரில் சிகிச்சை பெற்று வரும் அருள் ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக இன்று ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு சென்னை புறப்பட்டிருக்கிறார்.
பாமக அமைப்பு ரீதியாக பலமாக இருக்கும் சேலம், தருமபுரி மாவட்ட கூட்டங்களை அன்புமணி இன்று நடத்தவுள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, இரா.அருள் ஆகியோர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் கலந்து கொள்ள வேண்டும் என்கிற சூழல் எழுந்தது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத பட்சத்தில் ராமதாஸின் ஆதரவாளராக அருள் அறியப்படுவார். இதற்கிடையே சேலத்தில் நடைபெற இருக்கின்ற பொதுக்குழு கூட்டத்திற்கான சுவரொட்டிகளில் சட்டமன்ற உறுப்பினர் அருள் பெயர் நீக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.