• June 19, 2025
  • NewsEditor
  • 0

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சர்ச்சையான நிலையில், மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.

பள்ளிவாசல் நிர்வாகிகளுடன்

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட திருமாவளவன் இன்று திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து அருகில் உள்ள சிகந்தர் பாதுஷா பள்ளிவாசலுக்கு சென்று நிர்வாகிகளிடம் உரையாடினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “தர்கா மலை உச்சியிலே இருக்கிறது. அதேபோல, இந்துக்கள் வழிபடும் காசி விஸ்வநாதர் ஆலயமும் இதே மலையின் உச்சியில் இருக்கிறது. இரண்டு தரப்பு மக்களும் ஒரே பாதையில் சென்று நெல்லித்தோப்பு என்ற இடத்தில் பிரிந்து தனித்தனியாக தங்களின் வழிபாட்டு தலங்களுக்கு செல்வது வழக்கமான ஒன்று. மலைக்கு அடியிலே பழனி ஆண்டவர் கோயில் இருக்கிறது, முதல் படைவீடு திருப்பரங்குன்றம் முருகன் கோயில் இருக்கிறது.

மதுரை மேயருடன்

ஒருவருக்கொருவர் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், சில மதவாத அமைப்புகள் இதில் தலையிட்டு இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் பகையை வளர்க்க முயற்சிக்கிறார்கள்.

அண்மைக்காலமாக இது தமிழகத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. எனவே, இந்த பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலில் இன்றைக்கு வருகை தந்தேன்.

கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம். ஆனால், உச்சி வேளையாக இருப்பதால் நெடுந்தூரம் மலை ஏற முடியாத ஒரு சூழலில் அடிவாரத்திலேயே இரு தரப்பு பிரதிநிதிகளையும், சந்தித்து சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துகளை கேட்டறிந்தேன்.

திருமாவளவன்

தங்களுக்கு இடையில் பகை இல்லை என்பதை தெளிவு படுத்தினார்கள். ஆகவே மதவாத சக்திகள் இந்த பிரச்னையை பெரிதாக்கக் கூடாது, தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே வேண்டுகோள் விடுகிறேன். அதை வலியுறுத்தி மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *