
மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனா (வயது: 52), திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தார்.
இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று தனது வாகனத்தில் வருகை தந்தார்.
ஜீயபுரம் என்ற பகுதியில் வந்தபோது, திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையின் நடுப்பகுதியைத் தாண்டி வந்ததால் எதிரே வந்த ஆர்.டி.ஓ வாகனத்தின் பக்கவாட்டில் மோதி விட்டது.
இதனால், நிலைதடுமாறிய வாகனம் சாலையோரம் நின்ற ஜே.சி.பி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், ஆர்.டி.ஓ., ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வாகன ஓட்டுநர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஜீயபுரம் காவல் நிலைய போலீஸார், விபத்தில் உயிரிழந்த வருவாய்க் கோட்டாட்சியர் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து மோதியதில் முசிறி ஆர்.டி.ஓ உயிரிழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.