
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்த பென்சில் தமிழழகன்(வயது: 30). இவர்மீது கரூரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பல பதிவாகியுள்ளன. இதனால் இவர் ரௌடி பட்டியலில், போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கரூர் -திருச்சி சாலை அமைந்துள்ள லைட் ஹவுஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணி ஒருவரிடம், பென்சில் தமிழழகன் மற்றும் கரூர் வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ், ஆகிய நான்கு பேரும் சேர்ந்து வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த பயணியை தாக்கி விட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அந்த பயணி கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், நேற்று வஞ்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே பென்சில் தமிழழகன் பதுங்கி இருந்ததாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீஸார் பென்சில் தமிழழகனை பிடிக்க முற்பட்டபோது போலீஸாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சி செய்து உள்ளார். அப்போது, தமிழழகன் மீது காவல் ஆய்வாளர் மணிவண்ணன் வலது முழங்காலுக்கு கீழே சுட்டத்தில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தமிழழகன் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து நீதிபதி மருத்துவமனையில் ரௌடிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதை அடுத்து, காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் காவலுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸாரால் சுட்டுபிடிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த பிரபல ரௌடி பென்சில் தமிழழகன் மீது கொலை வழிப்பறி அடிதடி என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோட முயன்றபோது போலீஸாரால் பிரபல ரௌடி ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.