• June 19, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

என் உயிரும் உயிரான குட்டி ஜெய்க்கு, 

நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது கொஞ்சம் பெரியவனாகி இருப்பாய்.

இப்போது உனக்கு நான்கு வயது – கேள்வி கேட்டு, கற்றுக்கொண்டு, விளையாடி, எங்களை சந்தோஷப்படுத்தும் பருவத்தில் இருக்கிறாய்.

உன் சிரிப்பும், சின்ன சின்ன விளையாட்டுகளும் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக்குகின்றன.

நான் உன்னை வளர்க்கும் அம்மா என்ற நிலை எனக்கு பெரிய வரமாக இருக்கிறது.

நீ வளரும்போது நான் விரும்புவது – நீ அறிவுடன், அன்புடன், பொறுப்புடன், மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்பதுதான்.

பெண்கள் மீது மரியாதை கொண்டிரு என் பிள்ளையே.

அவர்கள் உணர்வுகளையும், கனவுகளையும் மதிக்கக் கற்றுக்கொள்.

அவர்கள் பாதுகாப்பாகவும், பெருமையாகவும் உணரவேண்டும்.

சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் நல்லவனாக நீ வளர வேண்டும்.

பிறருக்கு உதவிகரமாக இருப்பது, பொறுப்பாக நடப்பது, நல்லதைச் சொல்வது – இவை எல்லாம் ஒரு நல்ல மனிதனின் அடையாளங்கள்.

நான் உன்னிடம் எந்தப் பாதையை எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டேன்.

உன் விருப்பம், உன் கனவுகள் எனக்கு முக்கியம்.

நீ எதை விரும்புகிறாயோ, அதை மகிழ்ச்சியுடன் செய்.

ஆனால் அதை மற்றவர்களுக்கு நன்மை தரும் வழியில் செய் – அதுவே போதும் எனக்கு.

நான் ஒரு வேலைக்குச் செல்வதாலே சில நேரங்களில் உன்னை விட்டுப் பிரிந்து இருக்க நேரிடுகிறது.

அப்போது எனக்குள் நான் உன்னை சரியாக வளர்த்துக் கொண்டிருக்கிறேனா? என்ற ஒரு குற்றவுணர்வு வந்துவிடுகிறது.

ஆனால் என் உழைப்பு உன் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கவே என்பதை நீ புரிந்து கொள்கிறாய்.

நான் வீட்டில் இருக்கும்போது உன்னுடன் இருக்க நினைப்பதை, உனக்கு நேரம் தர விரும்புவதை

நீ நல்லா புரிந்து கொள்கிறாய் – அதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

இதை நினைத்தபோது எனக்கு திருக்குறளில் வரும் ஒரு வரி ஞாபகம்வருகிறது:

“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகன்

சான்றோன் எனக் கேளாது தாய்.”

அதாவது,

தாயாக குழந்தையைப் பெற்ற சந்தோஷத்தைவிட,

அந்தக் குழந்தை நல்லவராக வளர்ந்து அனைவராலும் மதிக்கப்படும் நாள் அவளுக்குப் பெரிய மகிழ்ச்சி தரும்.

அந்த மகிழ்ச்சியை நான் ஒருநாள் உணர விரும்புகிறேன் என் குட்டி.

நீ நல்லவனாக வளர்வதைப் பார்த்து, நான் பெருமைபட விரும்புகிறேன்.

நல்லவனாக இரு – அறிவுடன் மட்டும் அல்ல,

அன்புடனும், மனசாட்சியுடனும்!

என்றும் உன்னை நேசிக்கும்,

உன் அம்மா

Letter Contest

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *