
சென்னை: “கீழடி அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் மொழி வெறி – இன வெறி நடவடிக்கை பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்கவில்லை” என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பாண்டிய மன்னரின் படைகள்தான் மறுபடியும் அணிவகுத்ததோ, பட்டாளச் சிப்பாய்கள்தான் களம் புகுந்தனரோ என விழிகள் வியந்து பார்க்கின்ற வகையில் மதுரை விரகனூர் சாலையில் ஜூன் 18-ஆம் நாள் திமுக மாணவரணியினர் அன்னைத் தமிழின் பெருமை காத்திடக் களமிறங்கினர். தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் திமுக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு.