
திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து விசாரணை வளையத்தில் இருந்த ஏடிஜிபி ஜெயராமன், தன் மீதான நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வ நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் இரு தினங்களாக நடைபெற்று வருகிறது.
நேற்றைய விசாரணையின் போது ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்யவில்லை என தமிழக அரசு சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. `அப்படி என்றால் அவரை ஏன் பணியிடை நீக்கம் செய்தீர்கள். அந்த பணியிடை நீக்கத்தை திரும்ப பெற முடியுமா?’ என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
திரும்ப பெற முடியாது!
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், `தற்பொழுது கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலுவையில் இருந்து வருவதால் ஏடிஜிபி ஜெயராமனின் பணியிடை நீக்கத்தை திரும்ப பெற முடியாது’ என்றும் `அதற்கு தற்பொழுது இருக்கக்கூடிய விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை’ எனவும் தெரிவித்தார்.
அப்போது பேசிய நீதிபதிகள், “இந்த விவகாரம் தொடர்பான வழக்கினை வேறு சிறப்பு விசாரணைக்கு மாற்ற முடியுமா?” என கேள்வி எழுப்பினர். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடுத்து வழக்கு சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் விசாரணை தொடங்கிய போது, இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடலாம் என கேட்க இருப்பதாகவும் இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரிக்க தங்களுக்கு சம்மதம் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவு
“எந்தெந்த வழக்குகள் என்பதைக் கூற விரும்பவில்லை. ஆனால் பல்வேறு வழக்குகளில் விசாரணையை இவ்வாறு தான் நாங்கள் செய்ய வேண்டும் என சில சமயங்களில் சென்னை உயர் நீதிமன்றம் எங்களை கட்டுப்படுத்துவது போல இருக்கிறது” எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏ.டி.ஜி.பி ஜெயராம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். இது முறையான நடவடிக்கை அல்ல” என கோரிக்கை முன்வைத்தார்.
இவை அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் தொடர்புடைய வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சிறுவன் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு நீதிபதி மாற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.
அதோடு ஏடிஜிபி ஜெயராம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்
வழக்கின் விசாரணையின் போது சில சமயங்களில் உயர் நீதிமன்றங்கள் தங்கள் வரம்பை மீறி நிர்வாக முடிவுகளையும் எடுப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.