
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி இன்றுடன் 7-வது நாளை அடைந்திருக்கிறது.
ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி, நேற்று ஒரு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, “அமெரிக்க அழுத்தத்திற்கு சரணடைய மாட்டேன். அதே நேரம் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையான சேதத்தை சந்திக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஈரான் சரணடையாது” என்றார்.
இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இணையுமா என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “நான் இணையலாம் இணையாமலும் இருக்கலாம். அதாவது நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.

இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலால் ஈரானிய அரசு சரிந்துவிடுமா என்றால்… நிச்சயமாக, எதுவும் நடக்கலாம். ஆனால், ஈரானின் ஃபோர்டோ அணு நிலையத்தை அழிக்கும் திறன் கொண்டவர்கள் நாங்கள் மட்டுமே. அத்னால் நான் அதைச் செய்யப் போகிறேன் என்று அர்த்தமல்ல” என ஊடகவியலாளர்களின் கேள்விக்கு தெளிவில்லாமல் பூடகமாகவே பதிலளித்திருக்கிறார்.
இதற்கிடையில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர்கள் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக நாளை ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியைச் சந்திக்க உள்ளனர்.