
கோவாவில் 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களை வென்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது பா.ஜ.க. பிரமோத் சவாந்த் கோவாவின் முதல்வராக பதவியேற்றார். கோவாவில் பழங்குடிகள் நலத்துறை (Tribal Welfare) முதல்வர் பிரமோத் சவாந்த் கட்டுப்பாட்டில் உள்ளது . இதன் காரணமாக, கோவாவில் பழங்குடியினர் நலத்துறைச் செயல்பாடுகள் நேரடியாக முதல்வரால் கவனிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த, விளையாட்டு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறைம் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கோவிந்த் கவுடே, கடந்த மே 25 அன்று பழங்குடி நல இயக்குநரகம் மற்றும் ஐக்கிய பழங்குடியினர் சங்கங்களின் கூட்டணி (UTAA) ஏற்பாடு செய்த பிரேர்ணா திவாஸ் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது
அப்போது, “முதல்வரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கும் பழங்குடியினர் நலத்துறைக்கு அதிக அளவு வரி செலுத்துவோரின் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைத் திறமையாக நடத்த முடியாவிட்டால், அது நிர்வாகத்தின் மீதான கட்டுப்பாடுயின்மையைக் காட்டுகிறது. என் கருத்துப்படி, நிர்வாகம் இன்று பலவீனமடைந்துள்ளது. ஒப்பந்ததாரர்களின் கோப்புகள் ஒரே அதிகாரக் கட்டடத்தின் கீழ் தந்திரமாக கையாளப்படுகின்றன.
அவர்களே ஊழல் செய்து தேவையானதை எடுத்துக்கொண்டு பின்னர் திட்டங்களை சமர்பிக்கிறார்கள். ‘பழங்குடியினர் பவன்’ கட்டுவது பழங்குடி சமூகத்தின் நீண்டகால கோரிக்கை. அவர்கள் இந்தத் திட்டத்திற்காக தங்கள் நிலத்தை வழங்கினர்… நான் பழங்குடியினர் நல அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் முடங்கியுள்ளது. திட்டத்தில் ஏன் முன்னேற்றம் இல்லை?” என முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் நடந்த ஊழல் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இந்த உரை நிகழ்த்தி மூன்றாவது வாரம் கோவிந்த் கவுடே கலை மற்றும் கலாச்சார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றும் முதல்வரின் உத்தரவுக்கு கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை உடனே ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய கோவா பா.ஜ.க தலைவர் தாமு நாயக், “இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. அரசாங்கம், கட்சி மற்றும் கட்சியின் மத்தியத் தலைமையின் ஆலோசனைக்குப் பிறகு இது எடுக்கப்பட்டது. கட்சி ஒழுக்கம் அவசியம்” என்றார்.