
நேற்று காலை, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் 35 நிமிடம் தொலைபேசியில் பேசியதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.
அந்தத் தொலைபேசி அழைப்பில் மோடி ட்ரம்பிடம், ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் நிறுத்தத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை. எந்தவொரு நாட்டின் மத்தியஸ்தையும் இந்தியா ஏற்றதில்லை… இனியும் ஏற்காது’ என்று தெளிவுப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இருந்தும், நேற்று இரவு ட்ரம்ப், தான் முன்பு கூறியதையே கூறியிருக்கிறார். அதாவது, ‘நான் தான் போரை நிறுத்தினேன்’ என்று மீண்டும் கூறியிருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க… நேற்று பிற்பகல் (அமெரிக்க நேரப்படி) பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து வைத்துள்ளார் ட்ரம்ப்.
இந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப், “போருக்குச் செல்லாமல் தாக்குதலை நிறுத்தியதற்கு அசிம் முனீருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்பினேன். அது தான் நான் அவரை சந்தித்ததற்கான காரணம். நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இரண்டு ஸ்மார்ட் நபர்கள் போர் வேண்டாம் என்று முடிவு எடுத்தனர். இரு நாடுகளுமே மிகப்பெரிய அணு சக்தி நாடுகள். அசிம் முனீரை இன்று பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.