• June 19, 2025
  • NewsEditor
  • 0

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி மாநிலச்செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மாணவரணியினர், திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

திமுக மாணவரணி ஆர்பாட்டம்

ஆர்பாட்டத்தில் திருச்சி சிவா பேசும்போது, “ஹரப்பா நாகரீகத்திற்கு முன் தமிழர் நாகரீகம் இருந்தது அகழாய்வு மூலம் தெரிய வந்துள்ளது, ஒன்றிய அரசு நம்பிக்கையின் அடிப்படையில் இந்திய நாகரீகத்தை கூறுகிறது, தமிழக அரசு ஆதாரத்தின் அடிப்படையில் தமிழர்களின் நாகரீகத்தை கூறுகிறது.

சேது சமுத்திரத் திட்டம் வந்திருந்தால் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கும், ராமர் பாலம் இருக்கிறது எனக் கூறி சேது சமுத்திரத் திட்டத்தை பாஜக நிறுத்தியது.

ஒன்றிய அரசின் சார்பில் நியமித்த தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீராம் கீழடி ஆய்வில் ஒன்றுமில்லை என கூறினார்.

பின்னர் தமிழக அரசு நடத்திய ஆய்வில் பல்வேறு ஆச்சர்யம் கிடைத்துள்ளது. இரும்பை முதன் முதலாக தமிழர்கள் கண்டுபிடித்தனர், தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன் வேளாண் தொழில் செய்துள்ளார். கீழடி அகழாய்வு போல இந்தியாவில் வேறு எந்தவொரு பகுதியிலும் அகழாய்வு நடைபெறவில்லை.

திமுக மாணவரணி ஆர்பாட்டம்

ஒன்றிய அரசு, தமிழ்நாடு மீது பண்பாட்டு போர் தொடுத்துள்ளது. பண்பாட்டு போரில் பாஜகவுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள எட்டப்பர்கள் துணை போகிறார்கள். ஒன்றிய அரசின் போருக்கு திமுகவினர் அஞ்ச மாட்டார்கள். பாஜகவின் வஞ்சக செயலை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், கீழடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசுவேன், கீழடி அகழாய்வை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்குவோம்.

நாடாளுமன்றத்தில் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க உள்ளோம். தமிழர்களின் வரலாற்றை மறைக்க ஒன்றிய அரசு யார்?. தமிழர்களின் நாகரீகத்தை மறைக்க நினைக்கும் பாஜகவை தமிழகத்திக்குள் விடக்கூடாது. கீழடி விவகாரத்தில் நாம் போராடி வெற்றி காண வேண்டும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *