
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
தூங்கி எழுந்தால் இப்போதெல்லாம் உன் நினைவாகவே இருக்கிறது. எப்போது சமைத்தாலும் உன் நினைவு தான். உனக்கு நினைவிருக்கும் அன்று உன்னை சமைத்து தர சொன்னேன் நீ எனக்கு சமையல் மறந்து விட்டது என்றாய் கோபத்தில் கத்தினேன்.
இப்போது எனக்கு புரிகிறது வயது அறுவது நெருங்க எனக்கும் சமையல் மறந்து போகிறது. அன்று உன் மேல் கோபம், பாத்திரங்களை தூக்கி எறிந்தேன், கத்தினேனேன்.
எனது முதல் முப்பது வருடம், நாம் இருவர் மட்டுமே எத்தனை இடங்கள்.. போகாத இடமில்லை தாத்தா வீடு, சித்தி வீடு ,பின்பு நமக்கென்று கிடைத்த சிறிய தொகையில் நமக்கென்று ஒரு சிறிய வாடகை வீடு, பாம்பேயில் அத்தை வீடு, என மாறி, மாறி என் முப்பது வருடம் கழிந்தது.
நேற்று தான் நினைவுக்கு வந்தது எனக்கு அல்வா பிடிக்கும் என்பதால் மதுரையில் ஏழு கிலோ மீடர் நடந்தே சென்று எனக்காக வாங்கி வந்தது. திருச்சி ராமகிருஷ்ணா பஜன் மண்டலியில் நீ பாடிய தேவாரமும், திருவாசகமும் இன்னமும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இரவெல்லாம் என்னை தூங்கவிடாமல் பேசிக் கொண்டே இருப்பாய் நானும் அதைக் கேட்டுக் கொண்டே இருப்பேன் கோபமாக இருக்கும்.
இப்போது புரிகிறது உன் நிலைமை ஒரு பெண்ணை தனியாக வளர்த்துவது எவ்வளவு கடினம் என்று, நமது வீடு சிறியதாக இருந்தாலும் அதை நீ அலங்கரிக்கும் விதமும்,வீட்டை சுத்தமாக நீ வைத்துக் கொள்ளும் விதமும் இன்றும் உன்னிடம் இருந்து நான் எடுத்துக் கொண்ட ஒன்று அதுவே ,ஆனால் அன்று நீ அதை செய்யும்பொழுது எனக்கு கோபமும் ,ஆத்திரமாக இருக்கும்.
இன்ஸ்டாகிரமிலும் ,பேஸ்புக்கிலும் இப்போது அனைவரும் தனது அம்மாவையும் அப்பாவையும் பகிரும் பொழுது நான் ஏன் உன்னுடன் புகைப்படம் எடுக்கவில்லை என்று இப்போது வருந்துகிறேன்.

நம் வீட்டு ஜன்னலில் யாரோ ஒருவன் காகிதம் போட அது எனக்காக என்று நீ என்னை சந்தேகிக்கும் போது உன் மேல் அவ்வளவு ஆத்திரம் எனக்கு. அனைத்து அம்மாக்களும் மகளின் கல்யாணத்திற்காக ஏங்குவார்கள் ஆனால் எனது கல்யாணத்தைப் பற்றி பேசினாலே நீ பயப்படுவாய். ஏன் என்று எனக்கு அப்பொழுது புரியாது எனக்கும் காலங்கள் ஓடிக்கொண்டே இருந்தது வயது முப்பத்தி இரண்டு கடந்து விட்டது.
எனக்கும் கல்யாணத்தைப் பற்றிய பயம் ,உன்னை எப்படி பார்த்துக் கொள்வேன் என்பதை பற்றிய பயம் நல்லபடியாக குருவின் அருளால் கல்யாணமும் முடிந்தது. இப்போது எனக்கு புரிகிறது தனிமையை நினைத்து பயந்து இருக்கிறாய். இருவர் மட்டுமே வாழ்ந்த உலகம் நான் சென்று விட்டால் நீ தனிமையாகி விடுவாய் என்பது அப்போது எனக்கு புரியவே இல்லை.
நீயும் அப்பாவும் எதற்காக பிரிந்தீர்கள் என்ற காரணம் எனக்கு தெரியாது அதைக் கேட்கவும் அப்போது எனக்கு தோணவில்லை. ஆண்டவன் அருளால் நல்ல கணவன் அமைந்தான் உன்னை என்னுடனே வைத்துக் கொண்டேன். அவரும் உன்னை நன்றாகவே பார்த்துக் கொண்டார் என்பதே எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல், சந்தோஷம் அது மட்டுமே.
அவரையும் நீ கத்தும்போது எனக்கு பயமாக இருக்கும் எங்கே உன்னை வெளியே போக சொல்லி விடுவாரோ என்று. அப்போதெல்லாம் உன் மேல் கோபம். என்ன பாவம் செய்தேனோ குழந்தையும் இல்லை,வீட்டில் பணம் நெருக்கடி வேறு. அப்போதெல்லாம் என் மேல் கோபம் அதையும் உன்மேல்தான் காண்பித்தேன்.

ரூமிலே அமர்ந்து இருக்காதே. ஏதாவது வேலை செய் என்றால் இடுப்பு வலிக்கிறது,குதிங்கால் வலிக்கிறது என்பாய் கோபமாக வரும் ஆத்திரமாக இருக்கும் உனக்கு ஏதாவது நிகழ்ந்தால் யார் பார்த்துக் கொள்வது என்பதை நினைத்து என்மேல் எனக்கே கோபமாக இருக்கும். நாளடைவில் தனியாக பேச ஆரம்பித்தாய் என்னுடனே சண்டை போட ஆரம்பித்தாய் எனது ஆத்துக்காரிடமும் வீண் வம்பு இழுத்தாய் எனக்கு என்ன செய்வதென்றே தெரியாது.
உன் மேல் கோபமாக இருக்கும். ஏதோ கோபத்தில் உன்னை நான் அடித்து விட்டேன் இன்னும் அதை நினைத்து வருந்துகிறேன் இப்போது என் மேல் எனக்கு கோபம். உன் இறுதி காலங்களில் உன்னை நான் ஹோமில் சேர்த்தினேன் அன்றிலிருந்து என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டாய்.
உன்னை பார்க்க யார் வந்தாலும் என்னைப் பற்றி தப்பாக பேசுவாய் கோபமாக இருக்கும். உன்னை பார்க்க ஹோமிற்கு எப்போது வந்தாலும் என்னிடம் சண்டை போடுவாய், ஏன் வந்தேன் என்று தோன்ற வைப்பாய் கோபமாக இருக்கும். நான் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டதெல்லாம் ஒன்றே தான் அம்மாவிற்கு அமைதி கொடு அதை தவிர வேறு எதுவும் வேண்டாம்.

கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது.பணம் நெருக்கடி குறைந்தது. உன்னை பார்க்க ஹோமிற்கு வந்தால் என்னிடம் சண்டை போடுவாய் கோபமாக இருக்கும். இப்படி நாட்கள் ஓடிக் கொண்டிருக்க, அன்று உன் ஞாபகம் உன்னை பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது கிளம்பி ஹோமிற்கு வந்தேன். என்றும் இல்லாமல் அன்று அமைதியாக இருந்தாய் என் கைகளை பற்றி கொண்டாய் இன்றும் அது நினைவு இருக்கிறது.
உனது கை எனது கையை பற்றும் போது உனது கண்ணில் நீர் வந்தது அதை பார்த்த வாரே அமைதியாக அமர்ந்திருந்தேன். அப்போது என் சிந்தனையில் உன்னிடம் அம்மா என்னை ஒரு முறை பாராட்டுங்களேன் என்னை ஏன் பாராட்டவே மாட்டேங்கிறீங்க ஒரு வார்த்தை சொல்லுங்களேன். ஸ்ரீவித்யா நீ எனக்கு நல்ல பிள்ளை உன்னை மாதிரி பிள்ளை எனக்கு இல்லை அப்படின்னு ஒரு வார்த்தை நீ சொல்ல வேண்டும் என்று ஏங்கினேன்.
உன்னை பார்த்துக் கொள்ளத்தான் கல்யாணம் செய்து கொண்டேன் எங்கே நாம் இருவர் தனியாக விடுவோமோ என்ற எண்ணத்தில் தான் கல்யாணம் செய்து கொண்டேன். நான் செய்யும் அனைத்து செயலும் ஒரு முறையாவது ஏதேனும் ஒரு செயலுக்கு நீ என்னை பாராட்ட மாட்டாயா என்றுதான் எனது அனைத்து செயலும் இருக்கும்.
நீ என்னை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை உன்னை கட்டி அணைக்க வேண்டும் என்று தோன்றும் ஆனால் செய்ததே இல்லை ஏன் என்று தெரியவில்லை. ஹோமில் கடைசி ஆறு மாத காலம் நீ அமைதியாக இருப்பதாகவும் அம்மா முன்பு போல் இல்லை என்று சொல்லும் போதும் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

இன்றும் நினைவு இருக்கிறது எனது கைக்குள் உனது கை இருக்கிறது. இதையெல்லாம் நான் சிந்தித்துக் கொண்டே இருக்கும் போதே என்னை பார்த்து குழந்தை போல் அமைதியாக ஒரு சிரிப்பு சிரித்தாய். நீ என்னை பாராட்டியது போல் இருந்தது. நாம் நினைத்ததெல்லாம் அம்மாவுக்கு தெரிந்து விட்டதோ என்று போல் இருந்தது. என்னை அறியாமல் என்னுள் அப்படி ஒரு ஆனந்தம். அந்தக் கணம் தான் புரிந்தது நீ என்னை விட்டும்,இந்த உலகை விட்டும் பிரிந்து விட்டாய் என்று, அந்த நொடி எனக்குத் தெரியவில்லை எனக்கு இருந்த ஒரே உறவை நான் இழந்து விட்டேன் என்று நீ இறந்த செய்தியை கணவரிடம் சொன்னேன்.
பணம் அனுப்பி வைப்பதாக சொன்னார் எந்த உறவினரை அழைப்பது யாரை அழைப்பது யாருமே இல்லையே. உன்னைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லையே. தம்பி என்று ஒருவன் இருந்தான் முப்பது வருடத்திற்கு முன் பார்த்தது கல்யாணம் ஆகி சென்றவன் எங்கு இருக்கிறான். இப்போது என்ன செய்கிறான் என்று எதுவுமே தெரியாது.எந்தத் தொடர்பும் இல்லை.
இந்தியாவில் தான் பெண்கள் இறுதி சடங்கு செய்யக்கூடாது அல்லவா,யாரோ முகம் தெரியாதவரை வைத்து உனது இறுதி சடங்கை செய்து முடித்தேன். சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் இப்போது தனியாக இருக்கிறேன். இந்த தனிமையும் வயதும் உணர்த்துகிறது நீ ஏன் அப்போது என்னிடம் அப்படி கண்டிப்பாக இருந்தாய் என்று,நான் அழும் போதெல்லாம் என்னிடம் வந்து என்னை கட்டி அணைத்து “மா பங்காரம்””மா பங்காரு அழ”கூடாது அப்படின்னு சொல்லுவியேமா. இப்போதும் அழுது கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்னை “பங்காரு அழுகாதே”என்று சொல்வதற்கு தான் நீ இல்லை.

இந்த வயதும், தனிமையும் தான் உன்னை எனக்கு புரிய வைக்க வேண்டுமா. காலை கண் முழித்ததிலிருந்து தூங்கும் வரை என் தூக்கத்திலும் கூட நீ தான், நாம் திருச்சியில் அலைந்தது, அந்த சிறிய வீட்டில் தங்கி இருந்தது, உணவுக்கு வேண்டி தாத்தா வீட்டிற்கு சென்றது, ராமகிருஷ்ணா பஜன் மண்டலியில் நீ பாடியது, என்னை திட்டியது ,எனக்கு கல்யாணம் நடக்கும் போது நீ என்னுடன் பேசாமல் இருந்தது, உன்னை நான் ஹோமிற்கு கொண்டு போய் விடும்போது நீ என்னுடன் பேசாமல் இருந்தது, இப்படி ஒவ்வொன்றும். அன்று நான் உன்னை நினைத்து கோபப்பட்ட தருணங்கள். இன்று அதை நினைத்துக்கொண்டே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போதும் எனது ஒரே உறவாக நீ மட்டுமே இருக்கிறாய்.
இப்படிக்கு,
உனது ஒரே மகள்.
