
சென்னை: கொள்முதல் விலை உள்ளிட்ட ‘மா’ விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் வரும் ஜூன் 20-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ‘மா’ விவசாயிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 150 முதல் 250 லாரி வரை, அதாவது 1500 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.