
திருநெல்வேலி மாவட்டத்தில் தபால் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா, கொரோனா ஊரடங்குக்குப் பிறகு முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிய இந்த பூங்கா, தற்போது புல்வெளிகள் மூடிய, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களுடன் காணப்படுகிறது.
இந்த பூங்காவுக்கு அருகில் ஐந்து பள்ளிகள் செயல்பட்டு வருவதால், பள்ளி முடிந்த பிறகு மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் இங்கு வந்து பொழுதைக் கழிப்பதும், சிறுவர்கள் விளையாடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பூங்கா முறையாகப் பராமரிக்கப்படாமல் இருக்கிறது. விளையாட்டு சாதனங்கள் உடைந்தும், சுத்தம் இல்லாமலும் உள்ளதால் குழந்தைகள் விளையாட இடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

பூங்காவின் இத்தகைய நிலையைக் கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு விளையாட்டு பூங்கா என்பது மிக முக்கியமானது.

எனவே, புதிய உபகரணங்களைப் பொருத்தி, மரங்கள் நட்டு, பூங்காவைச் சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.