
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ‘ஸ்பிரிட்’. இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே கமிட்டாகியிருந்தார்.
ஆனால், அதன் பிறகு அவர் படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி படத்தில் நடிக்க வந்திருக்கிறார். தீபிகா படுகோனே, இத்திரைப்படத்திலிருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.
அதில் ஒன்று, தீபிகா படுகோனே தன்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதினால் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாக தனது பணி நேரத்தைக் குறைத்துக்கொள்ள கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த பணி நேரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீபிகா படுகோனே நினைத்தபடி சரிவராததால், அவர் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து விலகினார் என்று கூறப்பட்டது. இது திரைத்துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடிகர் அமீர் கான், நடிகை ஜெனிலியா தேஷ்முக் நடிப்பில் ‘சிதாரே ஜமீன் பர்’ என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஜெனிலியா,“10 மணிநேர வேலை என்பது கடினம்தான். ஆனால் அது சாத்தியமற்றது அல்ல. நான் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறேன்.
இயக்குநர் அதை 11 மணி, 12 மணி நேரமாக நீட்டிக்கச் சொல்லும் நாள்களும் இருக்கிறது. ஒரு இயக்குநரின் தேவைக்கு ஏற்றார்போல, வேலை நேரத்தை சில மணி நேரம் அதிகப்படுத்திக்கொள்ளக் கேட்பது நியாயமானது என்று நினைக்கிறேன்.
ஆனால் அந்த மாற்றங்களைச் செய்ய நமக்கு நேரம் கிடைக்க வேண்டுமே… அது இல்லாத சூழலால்தான் சிக்கல்கள் ஏற்படுகிறது. எல்லா நாள்களும் வேலை நேரத்தைவிட அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
ஒருசில நாள்கள் நமக்கு அதிக நேரம் வேலை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால் செய்துதான் ஆக வேண்டும். இது இரு தரப்புக்கும் மத்தியில் புரிதலுடன் செய்ய வேண்டிய ஒன்று” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.