
மதுரை: “மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு ஓர் ஆன்மிக நிகழ்ச்சி அல்ல. மாறாக, பாஜக பரிவாரம் நாடு முழுவதும் செய்து வரும் வெறுப்பு அரசியலின் ஒரு பகுதியே. அவர்களது நோக்கம் கடவுள் பக்தி அல்ல; கலவர உத்தியே என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்,” என முருக பக்தர்கள் மாநாடு குறித்து திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
முருக பக்தர் மாநாடு குறித்து திமுக சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் கோ.தளபதி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர் மாவட்டக்குழு செயலாளர் மா.கணேசன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் எம்.சி., மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) லிபரேசன் கட்சி மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.