
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். மும்மாநிலங்களை இணைக்கும் முச்சந்திப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளன.
அதேவேளையில், நாட்டில் யானை- மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் கூடலூர் முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கிறது.
யானை- மனித எதிர்கொள்ளல்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டு வரும் நிலையில், புதிய தொழில்நுட்ப உதவிகளையும் நாடி வருகிறது.
இந்த நிலையில்தான் இரவு நேரங்களிலும் யானைகளின் நடமாட்டத்தைத் தெளிவாகக் கண்காணிக்கும் விதமாக தெர்மல் டோன் ( Thermal Imaging Drones) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

வனத்தை விட்டு வெளியேறும் யானைகளை இந்த தொழில்நுட்பம் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து, எதிர்கொள்ளல்களைக் கணிசமாகக் குறைப்பதுடன் யானைகளுக்குத் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் குறித்தும் கண்டறியவும் முடியும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இப்பின்னணி குறித்துத் தெரிவித்த கூடலூர் வனக்கோட்ட அதிகாரிகள், “தெர்மல் டிரோன்களைப் பயன்படுத்தப்படுவதன் மூலம் யானைகளின் நடமாட்டங்களைக் கணித்து கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும்.
இரவு நேரங்களில் கண்காணிக்க முடியாத மலைப் பகுதிகளிலும் இந்த டிரோன் மூலம் நுணுக்கமான முறையில் கண்காணிக்க முடியும்.

டிரோன் மூலம் பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் வனவிலங்குகளின் பழக்க வழக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் முன்கூட்டியே பாதுகாப்புத் திட்டங்கள் வகுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
மேலும் வனப்பணியாளர்கள் நேரடி களப்பணியில் ஈடுபட்டு, ‘real-time alert’ மூலம் வனவிலங்குகள் ஊருக்குள் நுழையக் கூடும் என்கிற இடங்களில் முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுகிறது” என்றனர்.