
சென்னை: “முன்னாள் பாஜக தலைவர் எல். முருகன் கடந்த காலங்களில் ஊர் ஊராக வேலை தூக்கிக் கொண்டு அலைந்தார். ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்ததோடு, பதவியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது நயினார் நாகேந்திரன் முருகனை கையில் எடுத்திருக்கிறார். முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாய வலையில் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் எவரும் சிக்க மாட்டார்கள்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கீழடி அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பல்வேறு ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக வெளிக் கொண்டு வந்தார். ஆனால், மேலும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அறிவியல் ஆதாரங்கள் வேண்டும் என்கிறது மத்திய பாஜக அரசு. தமிழர்கள் 5350 ஆண்டு பழமை கொண்டவர்கள், தொழில்நுட்பங்களை கொண்டவர்கள், மூத்த நாகரீகம் படைத்த முதுமக்கள் என்று உலக ஆய்வு முடிவுகள் ஒப்புக் கொண்டுள்ளன.