• June 18, 2025
  • NewsEditor
  • 0

வாழ்வதற்காக இந்த பூமியில் இருக்கிற சின்னச்சின்ன உயிர்களும் செய்கிற தந்திரங்களைத் தெரிந்துகொண்டால் ஆச்சரியப்பட்டுப்போவோம். அந்தத் தந்திரங்களில் முக்கியமான ஒன்று இறந்ததுபோல நடிப்பது. அறிவியல் இதை தற்காலிக அசைவின்மை (tonic immobility) என்று குறிப்பிடுகிறது. பறவைகள், பாலூட்டிகள், மீன்கள் என அனைத்து உயிர்களுமே இந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துகின்றன. சில, தங்களை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக இப்படி நடிக்கின்றன. சில வேட்டையாடிகளோ, தன்னுடைய இரை ‘தன்னை செத்துவிட்டது’ என நம்பி அருகே வரவழைப்பதற்காக இப்படி நடிக்கின்றன.

தவளைகள்

இதுபற்றி அறிவியலாளர்கள், ‘ஒரு திருடன் முன்னால் மனிதர்கள் நாம் உறைந்துபோய் நிற்பதற்கும், பிற உயிர்கள் இறந்ததுபோல நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள். நாம் பயத்தில் உறைந்து நிற்கும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். ஆனால், பிற உயிர்கள் இறந்தவைபோல நடிக்கும்போது தன்னிச்சையாகவே அவற்றின் இதயத்துடிப்பு குறைந்துவிடும்’ என்கிறார்கள்.

இந்த வகையில் தவளை இனமும் இறந்ததுபோல நடிக்கும். இரையைப் பிடிக்க மற்றும் இரையாகாமல் தப்பிக்க மட்டுமல்ல… ஆண் தவளையுடன் இணை சேராமல் இருக்கவும் இந்த உத்தியை பெண் தவளைகள் பின்பற்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

செத்ததுபோல நடிக்கும் தவளைகள்
செத்ததுபோல நடிக்கும் தவளைகள்

ஒரு வேட்டையாடி, ஒரு தவளையை உண்பதற்காக அதை நெருங்கி வரும்போது, பெரிய தவளைகள் ஒரு லாங் ஜம்ப் செய்து தப்பித்துவிடும். ஆனால், சிறிய தவளைகளுக்கு இது சற்று கடினமான விஷயம். தவிர, குளிர்காலங்களில் அளவு வித்தியாசமில்லாமல் எல்லா தவளைகளுமே மெதுவாகத்தான் இயங்கும். இந்த நேரத்தில் பாம்புபோன்ற எதிரிகள் பிடிக்க வந்தால், தவளைகள் அப்படியே அசையாமல், கண்களைத் திறந்தபடியோ அல்லது மூடியபடியோ இருக்கும்.

செத்த தவளை என்றால், உடல் விறைத்துபோய் இருக்கும் அல்லவா… அதற்காக நான்கு கால்களையும் விறைப்பாக நீட்டி வைத்துக்கொள்ளும். இந்த ‘போலி மரண டெக்னிக்’கை தேரைகள், சில வண்டுகள், சிலந்திகள்கூட கைகொண்டு, எதிரிகளிடமிருந்து தப்பித்து விடுகின்றனவாம்.

ஆண் தவளையுடன் இனச்சேர்க்கையைத் தவிர்க்கும் பெண் தவளைகள்
ஆண் தவளையுடன் இனச்சேர்க்கையைத் தவிர்க்கும் பெண் தவளைகள்

பெண் தவளைகள் ஒருபடி மேலேபோய், பிடிக்காத ஆண் தவளைகளுடன் இனச்சேர்க்கை நடைபெறுவதைத் தவிர்க்க இறந்ததுபோல நடிக்கின்றனவாம். பெண் தவளைகளுக்கும் விருப்பம், விருப்பமின்மை போன்ற உணர்வுகள் உண்டா..? எதற்காக ஆண் தவளைகளைத் தவிர்க்கின்றன பெண் தவளைகள்? இதற்கு பல காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ‘தவளைகளின் இனப்பெருக்க காலம் மிகக்குறுகியது. அந்தக் காலத்துக்குள் பெண் தவளையுடன் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டுமென்று ஆண் தவளைகள் ஆக்ரோஷமாக இருக்கும். இதனால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பெண் தவளைகள் பயந்துபோய் இறந்ததுபோல நடிக்கும். இனப்பெருக்க காலத்தில் ஒரு பெண் தவளையை, ஒரே நேரத்தில் பல ஆண் தவளைகள் பற்றிக்கொள்ளப் பார்க்கும். இதனால், அந்தப் பெண் தவளை, நீருக்குள் மூழ்கி இறந்துவிடுவோம் என பயந்துபோய் இறந்ததுபோல நடிக்கும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *