
சென்னை: புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஐடிஎன்டி மையம் மூலம் தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை உலகின் முதல் 10 புத்தாக்க மையங்களில் ஒன்றாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி ஹப்) கடந்த 2023-ல் உருவாக்கப்பட்டது. இந்த மையம், வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை முன்தொழில் வளர்காப்பகம் (4 வாரகால திட்டம்), தொழில் வளர்காப்பகம் (12 முதல் 18 மாதகால திட்டம்), தொழில் மேம்பாட்டு திட்டங்கள் (16 வாரகால திட்டம்) மூலம் ஊக்குவித்து வருகிறது.