
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “கட்சிக்கான ஒரு பேனர் அறிவித்த உடன் முதல்வராகிவிடலாம் என்று நினைத்துவிடுகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், அவர்களை நீ தான் அடுத்த முதல்வர் என்று உசுப்பிவிடுகிறார்கள். அண்ணா ஒரு முறை, கருணாநிதி 5 முறை, ஸ்டாலின் ஒருமுறை என்று 7 முறை திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது என்று சொன்னால், அது ஒன்றும் அதிர்ஷ்டத்தில் நடக்கும் விஷயமல்ல.
`என் உயரம் எனக்கு தெரியும்’
ஏன் ஆட்சி அமைப்போம் என்று நீங்கள் சொல்வதில்லை, ஏன் உங்களுக்கு ஆசை வரவில்லை என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். நானும் ரவுடிதான் என்று வடிவேலு வண்டியில் ஏறுவதை போல் எல்லோரும் ஏற முடியாது. என் உயரம் எனக்கு தெரியும்.
அப்படி சில பேர் நான்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் வண்டியில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால், இதனை செய்யப் போகிறேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் தனி நீங்கள் தனி என்று இல்லை. நாங்கள் எல்லாம் சேர்ந்தததுதான் நீங்கள். மாநில அரசுகள் எல்லாம் சேர்ந்து டெல்லியில் ஒரு ஒன்றிய அரசை உருவாக்குகிறோம். அது ஒரு அரைக்கூட்டாட்சி தத்த்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசு.

அண்ணன் ஸ்டாலினின் வாரிசு குடும்ப வாரிசு இல்லை. கருத்தியல் வாரிசு. அதனால்தான் 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக்கொள்கை வேண்டாம் என்ற சொல்கின்ற துணிச்சல் அவருக்கு இருக்கிறது. அவர் கலைஞரின் பிள்ளை என்பதை விட அவர் ஒரு கருத்தியல் வாரிசு” என்று கூறியிருக்கிறார்.