• June 18, 2025
  • NewsEditor
  • 0

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநில மாணவர் அணிச்செயலாளர் ராஜீவ் காந்தி, “உலகிலேயே நாகரீகத்தை மனிதன் கண்டுபிடித்ததற்கு அடையாளம் இரும்பு கண்டுபிடித்ததுதான். அதன்படி சுமார் 5300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான இனமாக தமிழினமும் தமிழ் மொழியும் திகழ்கிறது.

ராஜீவ் காந்தி

கீழடியில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சான்றுகளின்படி முதல் மாந்தன் பிறந்தது தமிழ்நாடு என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. ஆனால், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசு, கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட தொடர்ந்து மறுத்து வருகிறது.

இரண்டு அகழாய்வுகளை மட்டும் நடத்திய ஒன்றிய அரசு. அதன் பிறகு நிதி ஒதுக்க மனமில்லாமல் இருந்தது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கி அதன் முடிவுகளையும் வெளிப்படையாக அறிவித்தார்.

ஒன்றிய பாஜக அரசின் சரஸ்வதி நாகரிக கட்டமைப்பு உடைந்து விடும் என்ற பயத்தோடு கீழடி அறிக்கையை வெளியிட தொடர்ந்து தாமதித்து வருகின்றனர். நீதிஅரசர் கண்டனம் தெரிவித்தும் கூட 16 வாரங்களில் வெளியிடுவதாக சொன்னவர்கள் 16 மாதங்கள் ஆகியும் வெளியிடாமல் மறுத்து வருகின்றனர்.

ராமர் பாலம் என்ற கதையைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை எப்படி நிறுத்தினார்களோ அதே போன்று கீழடி அகழாய்வு அறிக்கையையும் வெளியிடாமல் வஞ்சித்து வருகிறார்கள்.

ராஜீவ் காந்தி

இதனை கண்டித்துதான் 18 ஆம் தேதி மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தலைமையில் நடத்த உள்ளோம். இதில் மாநில, மாவட்ட மாணவரணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.

உலகத் தரமான ஆய்வுகளுக்கு பிறகும் கீழடியில் அறிவியல் உண்மை இல்லை என சொல்வது அவர்களின் ஒரு சார்பின்மையை காட்டுவதோடு ஊருக்கு ஊர் சென்று திருக்குறள் பேசி தமிழ் மொழியின் பெருமை பேசுவதாக கூறி வரும் பிரதமர் மோடியின் வேஷத்தை கலைக்க இந்த ஆர்ப்பாட்டம் துணை நிற்கும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *