
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிரான ஆவணங்களை இன்று தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த முறைகேடுகளில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும், அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கோரியிருந்தனர்.