• June 17, 2025
  • NewsEditor
  • 0

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்திருக்கிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, பார்சன்ஸ் வேலி, போர்த்தி மந்து உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.

ஊட்டி காமராஜர் அணை

இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 207 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது. சாலையோரத்தில் இருக்கும் அந்நிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் வாகனங்கள் மீது விழும் ராட்சத மரங்களால் பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது நாளாக தொட்டபெட்டா, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளது.

மழையின் தீவிரம் தற்போதைக்கு குறைந்திருப்பதால் மண்சரிவு அபாயம் நீங்கியிருப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள், மரங்கள் அருகில் நடமாடுவதையும் வாகனங்களை நிறுத்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

வாகனம் மீது விழுந்த மரம்

மழை பாதிப்புகள் குறித்து தெரிவித்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்கள், ” ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தலைக்குந்தா , கோடேரி ஆகிய பகுதிகளில் வாகனங்கள் மீது மரம் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

மின்கம்பங்கள் மற்றும் சாலையில் விழும் மரங்களை உடனுக்குடன் வெட்டி சீரமைத்து வருகிறோம். 24 மணி நேரமும் மீட்பு வீரர்கள் தயார் நிலையில் களத்தில் உள்ளனர்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *