
சென்னை: மதுரையில் ஜூன்.22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 7 நாட்கள் விரதத்தை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முருகனுக்கு உகந்த கிருத்திகை திருநாளாம் வரும் ஜூன்.22-ம் தேதி முருக பக்தர்கள் சார்பாக மதுரை மாநகரில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ சிறப்பாக நடத்தப்பட உள்ளது. அள்ளிக்கொடுப்பதில் எல்லையற்றவனான முருகப்பெருமானின் அருளாசியுடனும், அவர்தம் பக்தகோடிகளின் பெரும் ஒத்துழைப்புடனும் இந்த மாநாடு மாபெரும் வெற்றியடைய திங்கட்கிழமை (நேற்று) முதல் ஜூன்.22-ம் தேதி வரை விரதம் மேற்கொள்வதோடு, ‘மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்’ என பரிபாடல் குறிப்பிடும் ஆறு தலை கொண்ட அறுபடை நாயகனின் திருவடிகளில் பின்வரும் ஆறு முக்கியக் கோரிக்கைகளை வேண்டுதலாகவும் சமர்பிக்க உள்ளேன்.