• June 17, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அன்பின் ஆதித்யா,

சில நேரங்களில் காலம் நம் நினைவை விட வேகமாகப் பயணிக்கிறது. பல வருடங்களாக நான் தேடியலைந்த நிம்மதி நீ என்பதாலோ என்னவோ, கடந்த நான்கு வருடங்களின் ஒவ்வொரு தருணமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

நீ நன்றாகப் பேசுவதற்கு கற்றுக்கொடுக்கும் உன்னுடைய அம்மாவும், மெளனமாக இருப்பதற்குக் கற்றுக்கொடுக்கும் அப்பாவும் விரும்புவது இதுதான் – நீ விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்று வாழ்வில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக வாழவேண்டும். நாம் விரும்புவதை மீட்டெடுக்க நம் நினைவுகளே நமக்கு வழிகாட்டும்.

சித்தரிப்புப் படம்

பனிமலர் ஏறிய தேனும், காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும், நனிபசு பொழியும் பாலும், தென்னை நல்கிய குளிரிள நீரும் – பாரதிதாசன் எழுதிய இந்தக்கவிதை தான் இன்று என் மனதில் ஓடுகிறது. உன்னுடன் பழகிய அனைவரையும் குழந்தையாக்கிய ஒரு காரணத்திற்காகவே இதற்கு நீ பொருத்தமானவன்.

சின்னஞ்சிறிய மகிழ்ச்சிகள் தான் – சிறிய அழகிய பந்துகள் என்னை நோக்கி குதித்து வருவது போல, சிறிய நீர்க்குமிழிகள் என்னைச்சுற்றி பறந்து செல்வதைப் போல, நீ எனக்களித்து வரும் நிம்மதியையும், சந்தோசத்தையும் என்னால் இந்த மடலில் ஒரு கவிதையாக எழுத மட்டும் முடிந்துவிட்டால், நானும் ஒரு பாரதிதாசனாகி விடுவேன்.

என்னால் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு விசயமும் உன்னால் எனக்கு நடந்துள்ளது. என் மனைவியின் மனதில், என்னைத்தவிர இன்னொருவர் வந்து அமர்ந்து கொள்ளமுடியும் என்று நான் கனவிலும் நினைத்தில்லை. ஆனால், உன் அம்மா எனக்கு மாற்றாக உன்னை மனதில் நிறைத்து வைத்திருக்கிறாள். உன்னுடைய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், “உன் மூஞ்சி, மொகரையெல்லாம் உடைச்சு, தூக்கிப் போட்றலாமா” என்று தான் எனக்கு அவ்வப்போது தோன்றுகிறது.

சித்தரிப்புப் படம்

ஆனால், பாறைமேல் நீரும் ஒளியும் காற்றும் கடந்துசெல்வது போல, என்னை உன்னுடைய அன்பாலும், இருப்பாலும், ஆதிக்கத்தாலும் மென்மையாக, நுட்பமாக செதுக்கிக் கொண்டிருக்கின்றாய் மகனே.

இந்த வாழ்க்கையை எதன்பொருட்டும் கவலைப்பட்டு இழந்துவிடக்கூடாதென்று, ஒவ்வொரு வலியிலிருந்தும் உன்னால் மட்டுமே என்னை மீட்டுக்கொண்டு வருகிறேன். இறைவன் எனக்கு அளித்துள்ள பல ஆசீர்வாதங்களில் நீயும் ஒருவன். கடந்த நான்காண்டுகளாக என் வாழ்க்கையை ஒளிபெறச் செய்துவரும் உனக்கு நன்றிகள் பல.

உனக்கு நான் கொடுக்க விரும்பும் பரிசு இதுதான் – “நான் உடலால் மட்டுமே உனக்கு அப்பா; உள்ளத்தால் என்றுமே அம்மா தான்”.

என்றும் அன்புடன்,

அப்பா

My Vikatan-இல் உங்களது உணர்வுப்பூர்வமான `கடிதம்’

`ஒரு கடிதம் எழுதினேன்’

`ஒரு கடிதம் எழுதினேன்!’

My Vikatan: `பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களுக்கும் எழுதும் நெகிழ்வான கடிதம்!’

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கடிதங்கள் விகடன் தளத்தில் வெளியாவதுடன், அதனை எழுதியவர்கள், `இயக்குநர் ராம்’ உடன் இணைந்து அவர் இயக்கியுள்ள ‘பறந்து போ’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கும் வாய்ப்பு!

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 26, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *