
கர்நாடக மாநிலத்தில் ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளை ஜூன் 16 ஆம் தேதி முதல் நிறுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.
பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை மக்களுக்கு பெரும் உதவியாக இருந்த வருகின்றன. இருப்பினும் பாலியல் துன்புறுத்தல்கள், பைக் டாக்ஸி சேவையை தவறாகப் பயன்படுத்துவது போன்ற காரணத்தால் கடந்த ஆண்டு இந்த சேவைக்கு வழங்கிய அனுமதியை கர்நாடக அரசு திரும்பப் பெற்றிருந்தது. பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
தற்போது இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய மறுத்து, ஜூன் 16 ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவையை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவால் பைக் டாக்ஸி நிறுவனங்கள் தங்களின் பைக் டாக்ஸி சேவையை நிறுத்தும் நிலை ஏற்பட இருந்தது.
இருப்பினும், உயிர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மீதான மேல்முறையீடு ஜூன் 24-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதுவரை பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பைக் டாக்ஸி நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவையை, பார்சல் சேவை (Bike Parcel/ Moto Courier) எனப் பெயர் மாற்றம் செய்து தங்கள் சேவைகளைத் தொடர்ந்து வருகின்றன. சட்டத்தின் படி பைக் டாக்ஸிக்குத்தான் தடை. பார்சல் சேவைகளுக்குத் தடை இல்லை. இதன் அடிப்படையில் பைக் டாக்ஸி நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் குழு புத்திசாலித்தனமாக வார்த்தைகளில் விளையாடி சேவைகளைத் தொடர வழிவகை செய்திருக்கின்றன. பைக் டாக்ஸி நிறுவனங்களின் இந்தச் செயலை அதன் செயலிகளில் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.