
புதுடெல்லி: “ஒரு திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டாம் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிடுவது குறித்து கா்நாடக அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றதுபோல நடக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து காட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் 'த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தக் கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்தது.