
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’ திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அனுபமா பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘ப்ரேமம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் அனுபமா. மலையாளத்தைத் தாண்டி கோலிவுட், டோலிவுட் என மற்ற சினிமாக்களிலும் அப்போதே ‘ப்ரேமம்’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
அப்படத்தின் மூலம் அனுபமா பரமேஸ்வரன் மக்களிடையே பரிச்சயமானார். ஆனால், அதற்கடுத்து அவர் எதிர்பார்த்தபடி மலையாளத்தில் படங்கள் அமையவில்லை. அடுத்து அவர் சொற்ப மலையாளப் படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தார்.
இது குறித்து ‘ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’ பட விழாவில் அனுபமா, “மலையாள சினிமாவில் பலரும் என்னை நிராகரித்தார்கள். எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்றே தெரியவில்லை என்று ட்ரோல் செய்தனர். அதையெல்லாம் தாண்டி எனக்கு வாய்ப்பளித்த இப்படத்தின் இயக்குநருக்கு நன்றி.” என்று பேசினார்.
அனுபமா பேசிய விஷயம் குறித்து நடிகர் சுரேஷ் கோபி, “அனுபமா தனது மனதிலிருந்து பேசுகிறார். இது முதல் முறையல்ல. இதிலிருக்கும் உண்மை எனக்குத் தெரியும். சிம்ரன் ஒரு நடிகையாக இருந்தவர்.
மலையாளத் திரையுலகில் புறக்கணிக்கப்பட்டு விடப்பட்டவர். ஆனால், பின்னர் மலையாளப் படங்களில் முன்னணி கதாநாயகியாக அவரை நடிக்க வைக்க விரும்பி, முன்னணி இயக்குநர்கள் அவரைத் தேடிச் சென்றதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.

அசின் மற்றும் நயன்தாரா கேரளத்தைச் சேர்ந்தவர்கள். மலையாளத்தில் தங்கள் கரியரைத் தொடங்கினர். அவர்களைப் போன்ற நடிகைகள் மற்ற மொழிகளில்தான் முன்னணி கதாநாயகிகளாகப் புகழ்பெற்று மலர்ந்தனர்.
அனுபமாவின் வாழ்க்கையிலும் அதே நடக்கும். இதுதான் கர்மா. இது நிச்சயம் நடக்கும். அனுபமாவுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று கூறினார்.