
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பகுதியில் இருக்கும் கோயிலுக்கு கடந்த 2023-ம் ஆண்டு சென்ற பெண் ஒருவர், உடன் தன்னுடைய ஒன்பது வயது மகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.
அதேபோல விழுப்புரம், அண்ணாநகர்ப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அந்த கோயிலுக்குச் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். எப்போதும் அவர் காவி உடையில் இருந்ததாலும், தினமும் கோயிலுக்குச் சென்று வருவதாலும் பலரும் அவரை சாமியார் என்றே நினைத்திருக்கின்றனர்.
அதன்படி அன்றைய தினம் காவி உடையில் அந்த கோயிலுக்கு சென்றிருக்கிறார் ரமேஷ். சிறுமியின் தாய் கோயில் பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டிருந்த போது, சிறுமி கோயில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது பிரசாதம் தருவதாகக் கூறி அந்த சிறுமியை, கோயில் வளாகத்திலேயே மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
அதையடுத்து அந்த சிறுமி, அழுதுகொண்டே நடந்தவற்றை தன்னுடைய தாயிடம் தெரிவித்திருக்கிறார். அதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், மற்ற பக்தர்களுடன் சேர்ந்து அந்த போலி சாமியார் ரமேஷை மடக்கிப் பிடித்தார்.
அப்போது வந்திருந்த பக்தர்கள் ரமேஷை அடித்து துவைத்ததுடன், வளவனூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், ரமேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தார் நீதிபதி வினோதா.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.