• June 17, 2025
  • NewsEditor
  • 0

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி ஆய்வறிக்கைய மத்த்திய அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன் பேசும்போது, “கீழடி அகழாய்வு குழுவில் பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இன்றைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியிலிருந்து நொய்டாவிற்கு மாற்றப்பட்டுள்ளார். அது மட்டுமல்ல, ஆவணப்படுத்தும் பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். ஒரு அதிகாரி பணியிடமாற்றம் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அது நிர்வாக நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் தான்.

ஆனால், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த எட்டு ஆண்டுகளாக கீழடி அகழாய்வில் அதன் உண்மைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக பணியாற்றியவர்.

அப்படிப்பட்டவரை அகழாய்வை நீங்கள் தொடர வேண்டாம் என்று 2017 ஆம் ஆண்டு வெளியேற்றினார்கள். அதேபோல் அவர் மேற்கொண்ட கீழடி அகழாய்வின் அறிக்கையை எழுத வேண்டாம், மற்றொரு அதிகாரி எழுத ஏ.எஸ்.ஐ உத்தரவிட்டுள்ளது.

அதற்குப்பின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன் காரணமாக அமர்நாத் ராமகிருஷ்ணன்தான் அந்த அறிக்கையை எழுத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதற்குப் பிறகு கூட கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு மாற்றாமல் கோவாவிற்கு மாற்றப்பட்டார், அதனால்தான் அவர் அந்த ஆய்வறிக்கை எழுத முடியாமல் இருந்தது.

பின்னர் நீதிமன்றத்தை நாடி தான் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகுதான் அவர் ஆய்வு அறிக்கை எழுதி ஒப்படைத்தார். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

கீழடி
கீழடி

அந்த அறிக்கையை எப்போது வெளியிடுவீர்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின்பு 11 மாதத்தில் வெளியிடுவோம் என்று சொன்ன ஏ.எஸ்.ஐ அதற்குப் பின்பும் வெளியிடவில்லை.

இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம், பின்னர் ஒன்றிய பண்பாட்டுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது விரைவில் வெளியிடுவோம் என்று நாடாளுமன்றத்தில் உறுதி கொடுத்தார்.

அந்த உறுதி மொழியை காப்பாற்றவில்லை. கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மே 21 ஆம் தேதி ‘நீங்கள் செய்த அகழாய்வுக்கு கூடுதல் அறிவியல் ஆதாரம் வேண்டும்’ என்று விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளார்கள்.

கூடுதல் ஆதாரம் வேண்டுமென்றால் இவர்கள் நீதிமன்றத்திலேயே சொல்லி இருக்கலாம் அல்லது நாடாளுமன்றத்தில் இந்த அறிவியல் ஆதாரங்கள் போதாது கூடுதல் ஆதாரங்கள் வேண்டும் என்று சொல்லி இருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் 11 மாதங்களில் அறிக்கை வெளியிடுவோம் என்றும், நாடாளுமன்றத்தில் விரைவில் வெளியிடுவோம் என்றும் சொல்லிவிட்டு இப்போது கடைசி கட்டத்தில் வந்து கூடுதல் அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

அதன் தொடர்ச்சியாக தான் ஒன்றிய பண்பாட்டுத்துறை அமைச்சர் கடந்த 10 ஆம் தேதி சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்து ‘இதை ரீஜினலாக பார்க்காதீர்கள், கூடுதலாக அறிவியல் ஆதாரம் தேவை’ என்று சொல்லுகிறார். இந்தப் பின்னணியில்தான் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆவணப்படுத்தும் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஒரு இயக்குநர், அந்த ஆவணப்படுத்தும் பிரிவில் எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள் என்று கேட்டேன் அனேகமாக இவர் மட்டும்தான் அனுப்பப்படுகிறார் என்று தகவல் சொன்னார்கள். ஒரு ஆய்வை நடத்தியதற்காக ஒரு ஆய்வாளர் எப்படி எல்லாம் வேட்டையாடப்படுவார் என்பதற்கு தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிகழ்த்தி காட்டிக்கொண்டே இருக்கிறது.

நாங்கள் விரும்புவதைப் போல் நீங்கள் இல்லை என்றால் எங்களுடைய கருத்துக்கு நீங்கள் இசைவாக இல்லை என்றால் நாங்கள் என்னவெல்லாம் செய்வோம் என்பதைத்தான் ஒன்றிய அரசு காட்டிக்கொண்டிருக்கிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணா

மே 23 ஆம் தேதி இப்பிரச்னை சம்பந்தமான அறிக்கையை நான் வெளியிட்டேன் அன்றிலிருந்து இன்று வரை 20 நாள்களாக தமிழ்நாட்டில் பேசும் பொருளாக ஆய்வறிஞர்கள், வரலாற்றாளர்கள், தமிழக முதல்வர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் நிலையில், இன்று அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றிய அரசு தங்களுடைய கொள்கையில் எப்படி உறுதியாக இருக்கிறது என்பதை தமிழ்நாட்டிற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் மூலம் எடுத்துச் சொல்லும் நடவடிக்கையாக தான் இதை நாங்கள் பார்க்கிறோம். தமிழ்நாட்டுக்கு எதிராக, தென்னிந்தியாவிற்கு எதிராக தென்னிந்தியாவின் வரலாற்றுக்கு எதிராக ஒன்றிய அரசு எடுத்து வரும் பாரபட்சமான நடவடிக்கை இது.

தனி மனிதனை இது போன்று வேட்டையாடுவதனால் வரலாற்று உண்மைகளை மறைத்து விட முடியும் என்ற ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தமிழக மக்கள் அரசியல் களத்தில் அதற்கான பதிலை அளிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *