
சீரியல் நடிகை ரெஹானா, தன்னை ஏமாற்றி பண மோசடி செய்து விட்டதாக சென்னையைச் சேர்ந்த பார் உரிமையாளர் ராஜ் கண்ணன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், ராஜ் கண்ணன் மீது ரெஹானாவும் பதில் புகார் கொடுத்துள்ளார். நாளை பூந்தமல்லி போலீஸார் இருவரையும் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில், இன்று ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் ரெஹானா புகார் கொடுத்திருக்கிறார்.
‘ஆனந்த ராகம்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’ ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ‘பொன்னி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நடிகை ரெஹானா. `திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவருடன் விவாகரத்தாகி விட்டதாகச் சொல்லி தன்னுடன் பழகினார்’ என்பதே ராஜ் கண்ணனின் குற்றச்சாட்டு.
கடந்த சில மாதங்களாக கண்ணனும் ரெஹானாவும் ஒன்றாக வசித்து வந்ததாகவும், தற்போது முதல் கணவருடன் ரெஹானாவுக்கு விவாகரத்தே நடக்கவில்லை என்றும் அவர் தன்னிடம் சொன்னதெல்லாம் பொய் என்றும் கூறியிருக்கிறார் ராஜ் கண்ணன்.
ரெஹானாவுக்கு நகை வாங்கியது, அவரது குழந்தைகளுக்குச் செலவு செய்தது என சுமார் 20 லட்சம் வரை செலவு செய்தாராம் ராஜ் கண்ணன். எனவே தற்போது பணத்தை மீட்டுத் தரக் கேட்டு புகார் அளித்திருக்கிறார்.
ராஜ் கண்ணன் மீது ரெஹானா பதிலுக்கு அளித்திருக்கும் புகாரில், `தன்னிடமிருந்து சுமார் 15 லட்சத்துக்கு மேல் பிசினஸை டெவலப் செய்ய வாங்கினார்’ எனச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
இருவர் தரப்பிலும் மாறி மாறி புகார் அளித்திருக்கும் நிலையில் யார் சொல்வது நிஜம்? இருவரும் திருமணம் செய்தது உண்மையா என்பது குறித்து விசாரிக்க இருவருக்கும் பொதுவான சிலரிடம் பேசினோம்.

”ரெஹானாவுக்கு முதல் திருமணம் நடந்தது நிஜம். அந்தக் கணவருடன் கருத்து வேறுபாடு உண்டானதும் நிஜம். அந்த விவகாரம் பத்தி அவங்க பேட்டிகளே கொடுத்திருக்காங்க. ஆனா சட்டபூர்வமா அவங்க பிரிஞ்சுட்டாங்களானு தெரியலை. இந்த நிலையில் இங்க சீரியல்கள்ல நடிச்சிட்டிருந்தப்ப ரெஹானாவுடைய தோழிகள் சிலர் மூலமா பார் வச்சிருந்த ராஜ் கண்ணன் அறிமுகமாகியிருக்கார். கொஞ்ச நாள் பழகியதும் ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கலாமானு யோசிச்சிருக்காங்க.
ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச சிலர் முன்னிலையில் ரெஹானாவைத் திருமணம் செய்துகிட்டதா ராஜ் கண்ணு சொல்றார். ஆனா அந்த திருமணமுமே சட்டபூர்வமா நடந்ததா என்பது தெரியவில்லை.

இந்தச் சூழல் கொஞ்ச நாள் சேர்ந்து வாழ்ந்ததுல ஒருத்தருக்கொருத்தர் கருத்து வேறுபாடு வந்திருக்கு. தொடர்ந்து சின்னச் சின்ன பிரச்னைகள் வளர்ந்து ஒருகட்டத்துல ரெண்டு பேருக்குமிடையில் பெரிய பிளவை உண்டாக்கியிருச்சு” என்கிறார்கள்.
தற்போது ராஜ் கண்ணன் தரப்பு புகார் கொடுத்திருப்பதால் ரெஹானாவும் பதில் புகார் தந்திருக்கிறார்.
நாளை இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜர் ஆவார்களா என்பதைப்பொறுத்தே இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது தெரிய வரும்.!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…