
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக வரும் ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யபடும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அன்றையதினம் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015-ம் ஆண்டில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.