
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகர்ப் பகுதியில் நால்ரோடு சந்திப்பில் கன்டெய்னர் லாரி ஒன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பல்லடத்தைச் சேர்ந்த தாய் மகாரணி (54), மகள் கிருத்திகா (30) இருவர் மீது கன்டெய்னர் விழுந்தது.
அதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த பல்லடம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இரண்டு பெண்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிரேன் கொண்டு வரப்பட்டு, அந்த இடத்திலிருந்து கன்டெய்னர் அகற்றப்பட்டு, இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த, விபத்தால் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீஸார், தப்பியோடிய கன்டெய்னர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.