• June 17, 2025
  • NewsEditor
  • 0

ராமாயண தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தீர்தம் – மூர்த்தி – தலம் என மூன்று வகையாலும் சிறப்பு பெற்றது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் பாம்பன் கால்வாயினை கடப்பதற்கு ராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத சேதுபதியால் இலவச படகு பயணம் நடத்தப்பட்டது.

இதனை கண்காணிக்க மன்னரின் மகள்களான சீனி நாச்சியார், லெட்சுமி நாச்சியார் ஆகியோரின் கணவரான தண்டத்தேவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ராமேஸ்வரம் கோயில்

வட மாநிலத்தை சேர்ந்த சன்னியாசியான பைராகி என்பவரிடம் படகிற்கு கட்டணம் கேட்டதால், தண்டத்தேவர் மன்னரால் சிரச்சேதம் செய்யப்பட்டார். அத்தகைய வரலாறு கொண்ட ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளூர் மக்கள் இன்று பெருந்திரள் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்டனர்

உள்ளூரை சேர்ந்த மக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை ராமநாதசுவாமியை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இறந்தவர்களின் உடல் இக்கோயிலின் கோடி தீர்த்தம் தெளிக்கப்பட்ட பின்னரே அடக்கம் செய்யப்படுகின்றன. அதனை கூட உரிய நேரத்தில் வாங்கி வர கோயிலுக்குள் எளிதாக செல்ல முடியவில்லை. உள்ளூர் மக்கள் 90% பேர் தங்கள் திருமணங்களை இக்கோயிலிலேயே நடத்தி வருகின்றனர்.

கோயில் வாயிலில் தடுப்புகள்

திருமணம் முடிந்தவுடன் சுவாமி – அம்மனை வழிபட்ட பின்னர்தான் வீட்டிற்கு செல்வர். இவை தவிர பிறந்த நாள் மற்றும் விசேஷ நாள்களில் உள்ளூர் மக்கள் பெருமளவில் சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். அவர்கள் சன்னிதியின் சிறப்பு வழியில் சென்று காலங்காலமாக தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களும் இதே வழியில்தான் தரிசனத்திற்கு செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த சிறப்பு வழியில் உள்ளூர் மக்களை தரிசனத்திற்கு செல்ல தடை விதித்து இடையூறு ஏற்படுத்தியுள்ளது அறநிலையத்துறை.

இதற்கு மாற்றாக நெரிசல் மிகுந்த கட்டண தரிசன வழியில் செல்ல கோயில் அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். தரிசனத்திற்காக நாள்களை ஒதுக்கி ராமேஸ்வரம் வரும் பக்தர்களையும், சாமி தரிசனம் செய்துவிட்டு தங்கள் பணிகளை துவங்கும் உள்ளூர் மக்களையும் ஒரே வரிசையில் செல்ல கூறுவதன் மூலம் காலவிரயம் உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படுகின்றன. இவை தவிர கோயிலின் பிரதான நுழைவு வாயில் துவங்கி சாமி, அம்மன் சன்னிதி வரை கம்பி தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளனர்.

போலீஸாருடன் தள்ளுமுள்ளு

இதனால் கோயிலுக்குள் உள்ள காசி விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, நடராஜர், கால பைரவர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த பின்னரே தங்கள் வழிபாட்டை நிறைவு செய்வர்.

பொதுமக்களை தடுத்த போலீஸார்

ஆனால் தேவஸ்தான நிர்வாகத்தினர் ஏற்படுத்தியுள்ள தடுப்புகள் காரணமாக கோயிலின் அடையாளமாக விளங்கும் உலக புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரம் உள்ளிட்ட எந்த பிரகாரத்தையும் சுற்றிவர முடியாத நிலை உள்ளது. இத்தகைய தடைகளால் அம்மன் சன்னிதியில் வழக்கமாக நடந்து வந்த திருமண நிகழ்வுகளை கூட உள்ளூர் மக்களால் நடத்த முடியவில்லை.

இத்தகைய பாரம்பரிய உரிமையை பறிக்கும் கோயில் நிர்வாகத்தின் போக்கினை கைவிட கோரி இன்று காலை உள்ளூரில் உள்ள சர்வ கட்சியினர், அனைத்து சமூகத்தினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் காலை கோயிலின் மேற்கு கோபுர வாசலில் குவிந்தனர்.

திட்டகுடி சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்த இவர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் போலீஸார் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட பொதுமக்கள்

தடைகளை தாண்டி செல்ல முயன்ற பொதுமக்களை அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் வேனில் ஏற மறுத்து போராடியவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 35 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த போராட்டத்தினால் நடுத்தெரு மற்றும் கோயில் ரதவீதி பகுதிகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழிகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *